புதுடெல்லி: கொரோனா இரண்டாவது அலைக்கு எதிராக மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் 3 தவணையாக மத்திய அரசு ரூ.6000 வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் 8வது தவணை தொகையை பிரதமர் மோடி நேற்று விடுவித்தார். டெல்லியில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ரூ.20ஆயிரம் கோடியை பிரதமர் விடுவித்துள்ளார். இதன் மூலமாக 9.5கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள்.
இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது: 100 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்ற ஒரு பயங்கரமான தொற்று நோய் ஒவ்வொரு அடியிலும் உலகத்தை சோதித்து வருகின்றது. நமக்கு முன் கண்ணுக்கு தெரியாத எதிரி இருக்கிறது. அது பல வடிவங்களில் மாறி வருகிறது. கொரோனா வைரசின் இரண்டாவது அலைக்கு எதிரான போராட்டத்தில் தேவையானவற்றை பெறுவதில் இருக்கும் தடைகளை நாம் கடக்கிறோம். விரைவாகவும் போர்க்கால அடிப்படையிலும் மத்திய அரசு செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இது வரை 18 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. மக்கள் விரைவாக கொரோனா தடுப்பூசி பெறுவதை உறுதிசெய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மக்கள் அவர்களுக்கான தருணம் வரும்போது கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
மேற்கு வங்கம் சேர்ந்தது
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண் துணை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், கூறுகையில், “மேற்கு வங்கம் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளது. இன்று 7 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர்” என்றார்.