சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 100 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொண்டால் அவர்களில் 21 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றுபவர்கள் ஒரு நிமிடம் அலட்சியமாக இருந்தாலும் அவர்கள் கொரோனாவால் தாக்கப்படும் ஆபத்து உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தாங்களே சுயக் கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு, ஊரடங்கை மதித்து நடக்க வேண்டும். அவ்வாறு நடந்தால், கொரோனா பரவலை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வந்து சுதந்திரமாக நடமாடும் சூழலை உருவாக்கலாம். மாறாக, நோய்த்தொற்று அதிகரிப்பது தொடர்ந்தால் வரும் 24ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படும். எனவே மக்கள் சூழலை உணர்ந்து வீடுகளில் அடங்கி, கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.