×

புதிய அரசு வக்கீல்கள் நியமிக்கப்படும் வரை உயர் நீதிமன்றத்தில் ஆஜராக 17 வக்கீல்கள் நியமனம்: தமிழக அரசு ஆணை வௌியீடு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் அரசு தொடர்பான வழக்குகளில் ஆஜராக நிரந்தரமாக வக்கீல்கள் நியமனம் செய்யப்படும் வரை தற்காலிகமாக ஆஜராவதற்காக 17 வக்கீல்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து, அதிமுக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளில் ஆஜராகி வந்த வக்கீல்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், அரசு தொடர்பான வழக்குகளில் ஆஜராக வக்கீல்கள் நியமிக்கப்படாததால் ஓரிரு நாட்கள் அதிமுக அரசு நியமித்த வக்கீல்களே ஆஜராகி வந்தனர். இதையடுத்து, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். அரசு தொடர்பான முக்கிய பொதுநல வழக்குகளில் அவர் ஆஜராகி வருகிறார். இதற்கிடையே, மற்ற வழக்குகளில் ஆஜராக புதிய அரசு வக்கீல்களை நியமிக்கும் நடைமுறைகளை முடிக்கும் வரை தற்காலிக அடிப்படையில் 17 வக்கீல்களை நியமிக்குமாறு தமிழக அரசுக்கு அட்வகேட் ஜெனரல் மே 10ம் தேதி கடிதம் அனுப்பினார். அதன் அடிப்படியில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் ஆஜராக 17 வக்கீல்களை நியமித்து தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகளில் ஆஜராக பி.முத்துக்குமார், ஆர்.நீலகண்டன், சி.ஹர்ஷா ராஜ், எஸ்.ஜான், ஜெ.ராஜா சிங், ஏ.ஷப்னம் பானு ஆகியோரும், கிரிமினல் வழக்குகளில் ஆஜராக ஏ.தாமோதரன், ஆர்.முனியப்பராஜ், ஜெ.சி.துரைராஜ், இ.ராஜ் திலக், எல். பாஸ்கரன், ஏ.கோபிநாத் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் மதுரை கிளையில் சிவில் வழக்குகளில் ஆஜராக மூத்த வக்கீல் வீர கதிரவன், பி.திலக் குமார், ஆர்.பாஸ்கரன், ஏ.கே.மாணிக்கம், எஸ்.ரவி, எம்.முத்து ஆகியோரும், கிரிமினல் வழக்குகளில் ஆஜராக  எஸ்.ரவி, எம்.முத்துமாணிக்கம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு வக்கீல்கள் நியமன நடைமுறைகள் முடிந்து, புதிய அரசு வக்கீல்கள் நியமிக்கப்படும் வரை  இவர்கள் தற்காலிகமாக நீதிமன்றங்களில் ஆஜராவார்கள் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் ஆஜராக 11 கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜராக ஒரு கூடுதல் அட்வகேட் ஜெனரல், உயர் நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு அரசு பிளீடர், மாநில குற்றவியல் தலைமை வக்கீல், சிறப்பு அரசு வக்கீல்கள், கூடுதல் அரசு பிளீடர்கள், கூடுதல் குற்றவியல் வக்கீல்கள், மாநகர அரசு தலைமை வக்கீல், மாநகர கூடுதல் குற்றவியல் வக்கீல்கள், மாநகர அரசு பிளீடர், சிறப்பு நீதிமன்ற வக்கீல்கள், அரசு வக்கீல்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தற்காலிகமாக அரசு தரப்பில் ஆஜராக வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Government of Tamil Nadu , Until the appointment of new public prosecutors, 17 prosecutors will be appointed in the High Court: Tamil Nadu Government Order
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...