×

கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜனுடன் பிரதமர் மோடியை காணவில்லை: ராகுல்காந்தி டிவிட்

புதுடெல்லி:  ‘கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜனுடன் சேர்த்து பிரதமர் மோடியையும் காணவில்லை’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.  கொரோனா தீவிரமாக உள்ளதால் நாடு முழுவதும் தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், “கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் மருந்துபொருட்களுடன் சேர்த்து பிரதமர் மோடியையும் காணவில்லை. மிஞ்சி இருப்பது மத்திய விஸ்டா திட்டம் மற்றும் மருந்து பொருட்கள் மீதான ஜிஎஸ்டி மற்றும் இங்கேயும் அங்கேயும் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் மட்டும் தான், ”என பதிவிட்டுள்ளார்.பிரதமர் மோடி தினசரி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதுதொடர்பான தகவல்கள் ஊடகங்களில் அடிக்கடி காட்டப்படும் நிலையில், கொரோனா தீவிரமாகி நாடே அல்லல்படும் இந்த சமயத்தில் பிரதமர் மோடி பற்றி பெரிய அளவில் தகவல்கள் வெளிய வராததையே ராகுல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ராகுல் தனது மற்றொரு டிவிட்டரில், ‘‘நாடு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளபோது, அரசானது மக்களிடம் இருந்து இருப்பதை எடுக்கிறதா அல்லது கொடுக்கிறதா என்று தன்னைத்தானேகேட்டுக்கொள்ள வேண்டும்.  மத்திய அரசானது தனது கடமையை செய்யத் தவறி உள்ளது. எனவே தேவைப்படுவோருக்காக மக்கள் ஒன்று சேர வேண்டும். இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

நீதி விசாரணை தேவை
காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி  தனது டிவிட்டர் பதிவில், “உத்தரப்பிரதேசத்தில் கங்கையில் சடலங்கள் மிதக்கின்றன. உன்னாவில் ஏராளமான சடலங்கள்  புதைக்கப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. லக்னோ, கோரக்பூர், ஜான்சி மற்றும் கான்பூரில் உண்மைக்கு மாறாக குறைவாகவே உயிரிழந்தோர் எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.  சடலங்கள் மிதப்பது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.



Tags : Rahul Gandhi , Corona vaccine, PM missing with oxygen: Rahul Gandhi tweet
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...