மாஸ்கோ: ரஷ்யாவில் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 7 மாணவர்கள், ஆசிரியர் ஒருவர் பலியானார்கள். ரஷ்யாவின் கசான் நகரில் உள்ள பள்ளியில் நேற்று இரண்டு பேர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். அங்கிருந்த மாணவ, மாணவிகளை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆசிரியர் ஒருவரும் பலியானார். மேலும் 21 பேர் காயமடைந்ததாக அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனம் தெரிவித்து இருந்தது. டடர்டான் குடியரசு கவர்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கசானில் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் , 8வது கிரேட் படிக்கும் 4 மாணவர்கள், 3 மாணவிகள் உயிரிழந்துள்ளனர். ஆசிரியர் ஒருவரும் பலியாகி உள்ளார்.
மேலும் 18 மாணவர்கள், 3 ஊழியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட 19வயது நபர் பிடிபட்டுள்ளார். அவரிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.