புதுடெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இம்மாத இறுதியில் பயன்பாட்டிற்கு வரும் என அதன் உற்பத்தி நிறுவனம் கூறி உள்ளது. ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இத்தடுப்பூசியை இந்தியாவில் ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது. மத்திய அரசு அனுமதியைத் தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல்கட்டமாக 15 லட்சம் டோஸ் தடுப்பூசி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. 2ம் கட்டமாக அதே எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் இம்மாத இறுதியில் வர உள்ளன. இந்த தடுப்பூசி எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்து ரெட்டீஸ் நிறுவனம் கூறுகையில், ‘‘மே மாதத்தில் 30 லட்சம், ஜூனில் 50 லட்சம், ஜூலையில் 1 கோடி என மொத்தம் 1.8 கோடி டோஸ் தடுப்பூசி பெறப்படும். தற்போது பல்வேறு தனியார் மருத்துவமனைகள், மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. இம்மாத இறுதியில் இருந்து தனியார் மருத்துவமனைகளில் ஸ்புட்னிக் தடுப்பூசி போடப்படும். அடுத்த சில மாதங்களில் சப்ளை அதிகரிக்கப்படும்’’ என கூறி உள்ளது.