பாட்னா: பீகாரில் கங்கை நதியில் கொத்து கொத்தாக சடலங்கள் கரை ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவை கொரோனா சடலங்களா என சந்கேத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவால் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருவதால் சடலங்களை அப்புறப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகின்றது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் கங்கை கரையில் 150 சடலங்கள் கரை ஒதுங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. கரை ஒதுங்கிய இந்த சடலங்கள் கொரோனாவால் இறந்தவர்களுடையது என கூறப்படுகிறது. இவற்றை தெரு நாய்கள் கடித்து திண்பதாகவும், இந்த சடலங்களால் கொரோனா பரவும் அபாயம் நிலவுவதாகவும் உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும் இறுதி சடங்குகளின் போது இந்த சடலங்கள் கங்கையில் வீசப்பட்டு இருக்கலாம் என்றும், நீர் மட்டம் குறைவதால் இந்த சடலங்கள் கரை ஒதுக்கி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. பாஸ்டர் மாவட்டத்தில் உள்ள மகாதேவ் காட் பகுதியில் கங்கை கரையில் சடலங்கள் ஒதுங்கியுள்ளன. இது தொடர்பாக அரசு அதிகாரி கூறுகையில், “ உத்தரப்பிரதேசத்தின் பிர்பூர் மற்றும் பரேகாம் கங்கை ஆற்றங்கரையோரம் இருக்கின்றன. இவை பக்சருக்கு அருகில் உள்ளன.
அங்கிருந்து சடலங்கள் அடித்து வரப்பட்டு இருக்கலாம். கிராம மக்கள் இங்கு 400 முதல் 500 சடலங்களை பார்த்ததாக கூறுகின்றனர். ஆனால் நான் 40 முதல் 50 சடலங்களை தான் பார்த்தேன். இது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும்” என்றார்.
கொரோனா பரவும் என்ற அச்சுறுத்தல் காரணமாக எரிப்பதற்கோ அல்லது புதைப்பதற்கோ முடியாத உறவினர்கள் சடலங்களை கங்கையில் வீசி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.