சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. நேரடியாக 3 லட்சம், உப தொழில்கள் மூலம் 5 லட்சம் என 8 லட்சம் தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். கொரோனா வைரஸ் 2வது அலை வேகமாகப் பரவி வருவதால் வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள 1,070 பட்டாசு ஆலைகள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன.
இதுகுறித்து பட்டாசு ஆலை உற்பத்தியாளர் ஒருவர் கூறுகையில்,”தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பட்டாசு ஆலைகளை மூடியுள்ளோம். தீப்பெட்டி உற்பத்தி போலவே, பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு 50 சதவீத பணியாளர்களுடன் உற்பத்தியை மேற்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும்’’ என்றார்.