×

3ம் உலகப் போருக்காக சீனா ராணுவம் தயாரித்த உயிரி ஆயுதம் கொரோனா: அமெரிக்காவுக்கு கிடைத்த ரகசிய தகவலால் அதிர்ச்சி

வாஷிங்டன்,: கொரோனா வைரஸ் பரவுவதற்கு 5 ஆண்டுக்கு முன்பே, 3ம் உலகப் போரை எதிர்கொள்ள சார்ஸ் கொரோனா வைரஸ் போன்ற உயிரி ஆயுதத்தை தயாரிக்க சீன ராணுவம் திட்டமிட்டதாக அமெரிக்காவுக்கு ரகசிய தகவல் கிடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019ல் கொரோனா வைரஸ் பரவியது. அங்கு ஆய்வகத்தில் இருந்த இந்த வைரஸ் பரவியதாகவும், இது சீன விஞ்ஞானிகள் செயற்கையாக தயாரித்தது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் சீனா மறுத்தது. உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் கூட கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மறுத்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதற்கு 5 ஆண்டுக்கு முன்பே இதுபோன்ற ஒரு உயிரி ஆயுதத்தை தயாரிக்க சீன ராணுவம் திட்டமிட்டதாக அமெரிக்க வௌியுறவுத்துறையின் புலனாய்வு பிரிவுக்கு சில ரகசிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, 2015ம் ஆண்டில் சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார நிபுணர்கள் இணைந்து, சார்ஸ் கொரோனா என்ற வைரசை உருவாக்கும் திட்டத்தை தயாரித்தனர். இந்த வைரசை, தேவைப்படும்போது, உயிரி ஆயுதமாக பயன்படுத்தவும் திட்டமிட்டனர். 3ம் உலகப் போர் ஏற்பட்டால், தன்னை எதிர்க்கும் நாடுகள் மீதும் பயன்படுத்துவதற்கு சீனா இந்த உயிரி ஆயுதத்தை ஏவ திட்டமிட்டிருந்தது. இதனால், வைரஸ் இயற்கையாக உருவானதாக தோன்றும் அளவுக்கு ஆய்வுகள் இருக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் உலக நாடுகள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கும், குற்றஞ்சாட்டினால் மறுக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என சீன ராணுவம் உத்தரவிட்டுள்ளது. புதிய யுகத்தின் ஆயுதமாக தொற்று நோய்க்கிருமிகளை ஏவ சீனாவின் ராணுவ விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு கிடைத்த இந்த ரகசிய ஆவணங்களால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : World War III ,US , Corona, a biological weapon developed by the Chinese military for World War III: Shocked by US intelligence
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...