×

பேரிடர் காலத்தை மனதில் கொண்டு தேவையான முடிவுகளை எடுக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை நடத்த கமல்ஹாசன் வலியுறுத்தல்

சென்னை: பேரிடர் காலத்தை மனதில் கொண்டு மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்து தேவையான முடிவுகளை எடுக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பேரிடர் காலத்தில் முகக்கவசம், கிருமிநாசினி, கையுறைகள், கவச உடைகள், வெப்பநிலை ஸ்கேனர்கள் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு காலாண்டிலும் குறைந்தது ஒரு ஜிஎஸ்டி ஆலோசனை கூட்டமானது நடத்தப்பட வேண்டும் என்பது விதி என்றும் ஆனால் பல மாதங்களாக கூட்டம் நடைபெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆக்சிமீட்டர்கள், வென்டிலேட்டர்கள் போன்றவற்றுக்கு, ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். சிறு, குறு வணிகம், விமானப் போக்குவரத்து, தங்கும் விடுதிகள், உணவகங்கள், கேளிக்கை அரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பெரிய அங்காடிகள் உள்ளிட்ட எண்ணற்ற தொழில்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. அவற்றை மீட்டெடுக்க தேவையான உதவிகளைப் பற்றி விவாதிக்கப்பட வேண்டும். அத்துடன் அதிகாரிகளை அணுகுவதில் உள்ள சிக்கல்களுக்கும் தீர்வுகள் கண்டடையப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



Tags : Kamallhassan ,GST ,Council , kamalhasan
× RELATED திருப்பூரில் ஜிஎஸ்டி வரி குறித்து...