ஜெனீவா : சீனா தயாரிக்கும் சைனோஃபார்ம் கொரோனா தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மருந்து நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகளை உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளித்ததை அடுத்து அவை உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சீனாவின் தயாரிப்பான சைனோஃபார்ம் தடுப்பூசியின் ஆய்வு தொடர்பான காரணங்களால் அதற்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது.இதனால் சைனோஃபார்ம் தடுப்பூசியை பயன்படுத்த உலக நாடுகள் தயக்கம் காட்டின.
இந்த நிலையில் சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசியை அவசர அடிப்படையில் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் நேற்று பச்சைக்கொடி காட்டியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலை பெற்று 6வது தடுப்பூசி சைனோஃபார்ம் என்பது குறிப்பிடத்தக்கது.சீனாவின் இந்த தடுப்பூசி கொரோனா தொற்றினை தடுப்பதில் 79%செயல்திறன் மிக்கது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.தற்போது புழக்கத்தில் உள்ள பெரும்பாலான தடுப்பூசிகளை போலவே சைனோஃபார்ம் தடுப்பூசியும் 2 டோஸ்களாக செலுத்தப்பட வேண்டும் என்று சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.