பரமக்குடி : பரமக்குடியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மார்க்கெட்டில் சமூக இடைவெளியின்றி மக்கள் திரண்டதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மதியம் 12 மணி வரை மட்டுமே காய்கறி கடைகள் செயல்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் நேற்று பரமக்குடி மினி விளையாட்டு மைதானத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளில், மக்கள் முககவசம் இன்றி சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு கூட்டம் கூட்டமாக உலா வந்தனர். 12 மணியையும் தாண்டி காய்கறி கடைகள் இயங்கி வந்தன. வாரச்சந்தையில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளி இன்றி குவிந்ததால் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது. வாரச்சந்தையில் பொதுமக்கள் அதிக அளவில் குவியாமல் இருக்க சுகாதாரத் துறை, வருவாய்த் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.