×

மல்யுத்த வீரர் கொலை: சுஷில்குமார் மீது வழக்கு

டெல்லி: மல்யுத்த வீரர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் இளம் வீரர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரபல மல்யுத்த வீரர் சுஷில்குமார் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் மல்யுத்த வீரர்களுக்குள் தகராறு நடப்பதாக நேற்று அதிகாலை டெல்லி போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது.   அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில இளம் மல்யுத்த வீரர்கள் குமார், அஜய், பிரின்ஸ், அமீத்,  சாகர் குமார் என 5 வீரர்களுடன்,  மூத்த வீரர்கள் சிலர் மோதலில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அந்த மோதலில்  கடுமையாக தாக்கப்பட்ட சாகர் குமார்(23) சம்பவ  இடத்தில் இறந்து கிடந்துள்ளார். படுகாயங்களுடன் வீழ்ந்துக்  கிடந்த சோனு மகால்,  அமீத் ஆகியோர்  மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த வாகனங்களை சோதனை செய்ததில் ஒரு   துப்பாக்கி, ஏராளமான மரத்தடிகள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்தில் மூத்த வீரர்கள் பலர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  அவர்களில்  பிரபல மல்யுத்த வீரரும், 2முறை ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற  சுஷில்குமாரும் ஒருவர்.

இறந்த சாகர் தங்கியிருந்த வீடு மூத்த வீரர் ஒருவருக்கு சொந்தமானது. அந்த வீட்டை சாகர் காலி செய்ய மறுத்துள்ளார். அதனால் ஏற்பட்ட மோதல்தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.



Tags : Wrestler ,Sushilkumar , Wrestler murdered: Case against Sushilkumar
× RELATED நாட்டின் மகள்கள் தோற்றனர்; பிரிஜ்...