×

முதல்வர், அமைச்சர்கள் பயோ டேட்டா

* மு.க. ஸ்டாலின் முதலமைச்சர்
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், 5 முறை முதல்வராக இருந்தவருமான கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின். கலைஞரின் மறைவுக்கு பிறகு திமுக தலைவராக பதவி வகித்து வருகிறார். தமிழகத்தின் துணை முதல்வராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் 37வது மேயராகவும் இருந்தார். 1953ம் ஆண்டு கருணாநிதி - தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக சென்னையில் பிறந்தார். ஆகஸ்ட் 25, 1975ல் துர்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் என்ற மகனும் செந்தாமரை என்ற மகளும் உள்ளனர். தந்தையின் அரசியல் பணிகள் காரணமாகவும், ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தாலும் திமுக உறுப்பினரானார். 1975ல் மிசா சட்டத்தின் கீழ் சிறை சென்றார்.

ஸ்டாலின் ஆரம்பத்திலிருந்தே சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் தான் போட்டியிட்டு வந்தார். 1984ம் ஆண்டு முதல் முறையாக இங்கு அவர் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தோல்வியுற்றார். இளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவரை சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி வழங்கினார். 2001ம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இருப்பினும் 2002ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார்.

ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்று அந்த சட்டத் திருத்தம் கூறியதால், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார். அதன் பின்பு கலைஞர் கருணாநிதி தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்க, முதல் முறையாக மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சரானார். 2016 சட்டமன்றத் தேர்தலின் போது, ​​ஸ்டாலின் இளைஞர்களைக் கவரும் விதமாக நமக்கு நாமே என்ற தலைப்பில் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்திற்கு சென்றார்.

அந்த தேர்தலில் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியை வென்றார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். 2017ம் ஆண்டில், ஸ்டாலின் மற்றொரு நமக்கு நாமே சுற்றுப்பயணத்திற்கு சென்றார். பின்னர் 2018ம் ஆண்டில், அவரது தந்தை கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பின், ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றார். 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். தேர்தல் முடிவுகளில் இக்கூட்டணி 159 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இன்று மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கிறார்.

* துரைமுருகன்  நீர்வளத்துறை
பிறந்த தேதி: 1-7-1938
சொந்த ஊர்: காட்பாடி, வேலூர் மாவட்டம்
கல்வித்தகுதி: எம்.ஏ., பி.எல்.,
தொழில்: முழுநேர அரசியல்
குடும்பம்: மனைவி, ஒரு மகன்
அரசியல்: 1954ம் ஆண்டு 16வது வயதில் தி.மு.க.வில், அடிப்படை உறுப்பினராக இணைந்தார். 1971ம் ஆண்டு திமுக சார்பில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1977, 1980ம் ஆண்டுகளில் ராணிப்பேட்டையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1989ம் ஆண்டு மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991 தேர்தலில் தோல்வியை சந்தித்தார். 1996, 2001, 2006, 2011, 2016, 2021 என்று தொடர்ந்து 6 முறை காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்படி, சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர், மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, கைத்தறித்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்து வந்தார். மேலும், காட்பாடி மாவட்ட பிரதிநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர், தணிக்கை குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து திமுக பொதுச்செயலாளராக உள்ளார். தற்போது, காட்பாடியில் வென்று நீர்வளத்துறை அமைச்சராகி உள்ளார்.

* கே.என்.நேரு  நகர்ப்புற வளர்ச்சி துறை
பிறந்த தேதி: 9.11.1952
சொந்த ஊர்: கானக்கிளியநல்லூர், திருச்சி மாவட்டம்.
கல்வித்தகுதி: பி.யூ.சி.
தொழில்: விவசாயம்
குடும்பம்: மனைவி, ஒரு மகன், 2 மகள்
அரசியல்: தி.மு.க.வில் அடிமட்ட தொண்டானாக அரசியல் வாழ்க்கையை துவங்கிய நேரு 1986ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு லால்குடி தாலுகா புள்ளம்பாடி ஒன்றிய பெருந்தலைவராக வெற்றி பெற்றார். 1989-ம் ஆண்டு லால்குடி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கபட்டு, பால்வளம், மின்சாரம், தொழிலாளர் நலத்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக பணியாற்றினார். அதன்பின் 1993ம் ஆண்டு திமுக திருச்சி மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு 25 ஆண்டுகள் மாவட்ட செயலாளராக பணியாற்றினார். 1996ம் ஆண்டு லால்குடி தொகுதியில் மீண்டும் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக பணியாற்றினார். 2006 ம் ஆண்டு திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெற்று போக்குவரத்து துறை அமைச்சரானார். தற்போது, திருச்சி மேற்கில் வென்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் ஆகி உள்ளார்.

* ஐ.பெரியசாமி  கூட்டுறவு துறை
பிறந்த தேதி: 6.1.1953
சொந்த ஊர்: வத்தலகுண்டு, திண்டுக்கல் மாவட்டம்.
கல்வித்தகுதி: பிஏ, பிஜிஎல்
குடும்பம்: மனைவி சுசிலா, மகன் எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், மகன் ஐ.பி.பிரபு, மகள் இந்திரா,
அரசியல்: 1986 - 1989 - வத்தலகுண்டு ஒன்றிய பெருந்தலைவர், 1989 - 1991 - ஆத்தூர் எம்எல்ஏ, 1996 - 2001 - பத்திரப்பதிவுத்துறை அமைச்சர், 2006 - 2011 -வருவாய் மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர், 2016, 2021 - ஆத்தூர் தொகுதி எம்எல்ஏ, முன்னாள் திண்டுக்கல் மாவட்ட செயலாளர், தென்மண்டல செயலாளர், 6 முறை ஆத்தூர் தொகுதி எம்எல்ஏ. தற்போது திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர்.

* எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண்மை-உழவர் நலத்துறை
பிறந்த தேதி: 25.8.1957
சொந்த ஊர்: காட்டுமன்னார்கோவில், கடலூர் மாவட்டம்
கல்வித்தகுதி: பிஎஸ்சி, பி.எல்.
தொழில்: விவசாயம்
குடும்பம்: மனைவி, ஒரு மகன், 2 மகள்கள்
அரசியல்: குறிஞ்சிப்பாடி தொகுதியில் 6 முறை போட்டியிட்டதில் 5 முறை வெற்றி கண்டுள்ளார். இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமூகநலத்துறை, பத்திரப்பதிவுத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அமைச்சர் பதவி வகித்துள்ளார். தற்போது குறிஞ்சிபாடி தொகுதியில் வெற்றி வேளாண்மைத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* எ.வ.வேலு  பொதுப்பணித்துறை
பிறந்த தேதி: 15-3-1951
சொந்த ஊர்: சே.கூடலூர் கிராமம், திருவண்ணாமலை
கல்வித்தகுதி: எம்.ஏ.
தொழில்: விவசாயம்,
கல்விநிறுவனங்கள்.
குடும்பம்: மனைவி, 2 மகன்கள்
அரசியல்: 1993-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்தார். 2001, 2006 தேர்தல்களில் தண்டராம்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011, 2016, 2021 தேர்தல்களில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். 2006-ல் தண்டராம்பட்டு தொகுதியில் வெற்றி பெற்று உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். இதுதவிர, கட்சியில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராகவும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார். தற்போது, திருவண்ணாமலை தொகுதியில் வென்று பொதுப்பணித்துறை அமைச்சராகி உள்ளார்.

* க.பொன்முடி  உயர்கல்வி துறை
பிறந்த தேதி: 19.8.1950
சொந்த ஊர்: திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம்
கல்வித்தகுதி: பி.எச்டி
(முனைவர்)
தொழில்: முழுநேர அரசியல்
குடும்பம்: மனைவி, 2 மகன்கள்
அரசியல்: அண்ணாமலை பல்கலைக்கழக மாணவராக பயின்று 1970களில் தி.மா.மு.க செயலாளராக அரசியல் வாழ்க்கை தொடங்கினார். பின்னர், 5 முறை எம்.எல்.ஏ.வாகவும் (1989, 1996, 2001, 2006, 2016), மக்கள் நல்வாழ்வுத்துறை (1989), போக்குவரத்துத்துறை (1996), உயர்கல்வி-கனிம வளம்-சுரங்கத்துறை (2006) அமைச்சராகவும் இருந்துள்ளார். தற்போதைய தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதியில், 59,680 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும், உயர்கல்வி துறை அமைச்சராக பொறுப்பேற்கிறார்.

* கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
பிறந்த தேதி : 8.8.1949
சொந்த ஊர் :  கோபாலபுரம்,
அருப்புக்கோட்டை.
கல்வித்தகுதி : 10ம் வகுப்பு
குடும்பம் : மனைவி ஆதிலட்சுமி, மகன்கள் நாராயணன், ரமேஷ், மகள் உமாமகேஸ்வரி.
அரசியல் : முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர்
1984ல் கூட்டுறவுத்துறை அமைச்சர்.
1997ல் திமுக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்
2006ல் மக்கள் நல்வாழ்வுத்துறை, பிற்படுத்தப்பட்டோர்நலத்துறை, கைத்தறித்துறை அமைச்சர். தற்போது விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர்.

* தங்கம் தென்னரசு  தொழில்துறை
பிறந்த தேதி : 3.6.1966
சொந்த ஊர் : மல்லாங்கிணறு, காரியாபட்டி தாலுகா, விருதுநகர் மாவட்டம்.
கல்வித்தகுதி : பி.இ.,
குடும்பம் : மனைவி மணிமேகலை, 2 மகள்கள்.
அரசியல் : 1998-2001 (இடைத்தேர்தல்) அருப்புக்கோட்டை எம்எல்ஏ.
2006 - அருப்புக்கோட்டை தொகுதி எம்எல்ஏ, பள்ளி கல்வித்துறை அமைச்சர்.
2006-2012ம் ஆண்டு வரை மாநில திமுக நெசவாளர் அணி  செயலாளர்
2011ம் ஆண்டு தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு உறுப்பினர். தற்போது விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர்.

* எஸ்.ரகுபதி  சட்டத்துறை
பிறந்த தேதி: 30.7.1950
சொந்த ஊர்: திருமயம், புதுக்கோட்டை
கல்வித்தகுதி: பிஎஸ்சி. பிஎல்
தொழில்: வக்கீல்
குடும்பம்: மனைவி, ஒரு மகன், ஒரு மகள்
அரசியல்: புதுக்கோட்டை தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ள இவர், ஏற்கனவே தமிழக தொழிலாளர் நலத்துறை மற்றும் வீட்டுவசதிதுறை அமைச்சராக பதவி வகித்தார். 2004 நாடாளுமன்ற தேர்தலில் பெற்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சராக பதவி வகித்துள்ளார். தற்போது, திருமயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவருக்கு சட்டத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

* தா.மோ.அன்பரசன்  ஊரக தொழில் துறை
பிறந்த தேதி: 11-12-1959
சொந்த ஊர்: குன்றத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்
குடும்பம்: மோகலிங்கம் - மோ.ராஜாமணி தம்பதியரின் மூத்த  மகன். மனைவி, 2 குழந்தைகள்.
கல்வித்தகுதி: பியுசி
தொழில்: விவசாயம், கைத்தறி நெசவு.
அரசியல்: தனது தந்தையுடன் இணைந்து இளமை பருவம் முதல் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். 1985 முதல் குன்றத்தூர் பேரூர் இளைஞர் அமைப்பாளராகவும் 2000ம் முதல் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராகவும், அதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது வரை அந்த பொறுப்பில் இருந்து வருகிறார். 1996 முதல் 2006 வரை 10 ஆண்டு குன்றத்தூர் பேருராட்சி தலைவராகவும் இருந்தார். 2006ல்  நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் வெற்றி பெற்று தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக பணியாற்றினார். 2016 தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் 2 வது முறை வெற்றி பெற்றார். தற்போது நடந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பா.வளர்மதியை 40ஆயிரத்து 571 வாக்குகள் அதிகம் பெற்று  வெற்றி பெற்றுள்ளார்.

* பி.கீதா ஜீவன்  
சமூக நலன் - மகளிர் உரிமை துறை
பிறந்ததேதி: 6-5-1970
சொந்த ஊர்: போல்பேட்டை,
தூத்துக்குடி
குடும்பம்: கணவர் ஜீவன் ஜேக்கப் ராஜேந்திரன். ஒரு மகன், ஒரு மகள்
கல்வி தகுதி: எம்.காம்., பி.எட்.,
அரசியல்: 1996 முதல் 2001 வரை தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர், 2006 முதல் 2011 வரை தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ, சமூக நலத்துறை அமைச்சர். 2016 - 2021 தூத்துக்குடி தொகுதி 2வது முறையாக எம்எல்ஏ. தற்போது மூன்றாவது முறையாக தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்று சமூக நலத்துறை அமைச்சராகி உள்ளார். தந்தை மறைந்த பெரியசாமி ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளராகவும், 1989, 1996 ஆகிய இரண்டு முறை தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்தவர். அவரது மறைவிற்கு பின்னர் கீதா ஜீவன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆனார்.

* சு.முத்துசாமி  வீட்டு வசதித்துறை
பிறந்த தேதி: 4.9.1948
சொந்த ஊர்: பெரியார் நகர், ஈரோடு
கல்வித்தகுதி: எம்.ஏ.
தொழில்: கட்டுமானம்
குடும்பம்: மனைவி, ஒரு மகன்
அரசியல்: 1980, 1984ம் ஆண்டுகளில் 2 முறை ஈரோடு தொகுதியில் வெற்றி பெற்று எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். 1991ம் ஆண்டு பவானி தொகுதியில் வென்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 2010-ல் தி.மு.க.வில் இணைந்து உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரானார். பின்னர் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்டார். 2021ம் ஆண்டு தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் வெற்றி பெற்று வீட்டுவசதித்துறை அமைச்சர் ஆகி உள்ளார்.

* மு.பெ.சாமிநாதன்  செய்தித் துறை
பிறந்த தேதி: 5.5.1964
சொந்த ஊர்: முத்தூர், திருப்பூர் மாவட்டம்
கல்வித்தகுதி: பி.ஏ.
தொழில்: விவசாயம்
குடும்பம்: மனைவி, ஒரு மகன், ஒரு மகள்
அரசியல்: 1986ல் வெள்ளகோவில் திமுக ஒன்றிய இளைஞர்அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்தார். 1993ல் ஈரோடு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரானார். 1996ல் வெள்ளகோவில் எம்.எல்.ஏ.வானார். 2000ல் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளராக இருந்தார். 2001ல் வெள்ளகோவிலில் மீண்டும் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். 2003ல் மாநில இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றார். 2006ல் வெள்ளகோவில் மீண்டும் எம்.எல்.ஏ.வாகி நெடுஞ்சாலை துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது, காங்கேயம் தொகுதியில் வெற்றி பெற்று செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படதொழில்நுட்பவியல் அமைச்சர் பதவி பெற்றுள்ளார்.

* அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  
மீன்வளம்-மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு துறை
பிறந்ததேதி: 19-10-1952
சொந்த ஊர்: தண்டுபத்து,
திருச்செந்தூர்
கல்வித்தகுதி: எஸ்எஸ்எல்சி
குடும்பம்: மனைவி ஜெயகாந்தி,
3 மகன்கள்
அரசியல்: 2001ல் முதல் முறையாக அதிமுக சார்பில் போட்டியிட்டு திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். 9 மாதத்தில் முதலில் கால்நடைத்துறை அமைச்சராகவும், பின்னர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் இருந்தார். 2006ல் 2வது முறையாக திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக தலைமையுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் 2009ல் எம்எல்ஏ பதவியை ராஜினமா செய்து திமுகவில் இணைந்தார். 2009ல் நடந்த இடைத்தேர்தலிலும், 2011, 2016 தேர்தல்களிலும் திமுக சார்பில் எம்எல்ஏவானார். தற்போது 6வது முறையாக திருச்செந்தூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக உள்ளார்.

* ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்  
போக்குவரத்து துறை
பிறந்த தேதி : 31.8.1948.
சொந்த ஊர் : அதப்படக்கி, காளையார்கோவில் ஒன்றியம், சிவகங்கை மாவட்டம்.
கல்வி தகுதி : பி.எஸ்சி, பிஎல்
குடும்பம் : மனைவி நளாயினி அம்மாள் (லேட்), 3 மகன்கள் திருமணம் ஆனவர்கள் (சென்னையில் வசிப்பு)
அரசியல்: 1973ல் ஒருங்கிணைந்த விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட அதிமுக மாணவரணி அமைப்பாளர். காளையார்கோயில் அதிமுக ஒன்றிய செயலாளர், சிவகங்கை, மாவட்ட செயலாளர், மாநில பொருளாளர்.
1991 - 96 வரை அதிமுக அமைச்சர். 2001ல் மக்கள் தமிழ்தேசம் கட்சி துவக்கம். 2004 ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி, 2006ல் இளையான்குடி தொகுதி திமுக எம்எல்ஏ. 2009ல் சிவகங்கை பாராளுமன்ற தேர்தலில் (அதிமுக வேட்பாளர்) தோல்வி. தற்போது திமுகவின் மாநில தேர்தல் பிரிவு இணை தலைவர்.

* கே.ஆர்.பெரியகருப்பன்  ஊரக வளர்ச்சி துறை
பிறந்த தேதி: 30.12.1959
சொந்த ஊர் : அரளிக்கோட்டை, சிங்கம்புணரி வட்டம், சிவகங்கை மாவட்டம்.
கல்வித்தகுதி: பி.காம், பி.எல்.,
குடும்பம்: மனைவி பிரேமா, மகன் டாக்டர் கோகுல்கிருஷ்ணன்.
அரசியல்: திமுக தலைமை செயற்குழு உறுப்பினர், தற்போது வரை 19 ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டச் செயலாளர், 4 முறை எம்எல்ஏ, முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.


* கா.ராமச்சந்திரன் வனத்துறை

பிறந்த தேதி: 9.8.1951
சொந்த ஊர்: குன்னூர் நீலகிரி மாவட்டம்
கல்வித்தகுதி: பி.யூ.சி.

தொழில்: விவசாயம் மற்றும் தேயிலை வியாபாரம்
குடும்பம்: மனைவி, ஒரு மகன், ஒரு மகள்

அரசியல்: கடந்த 2006ம் ஆண்டு கூடலூர் சட்டமன்ற ெதாகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று கதர் மற்றும் கிராம ெதாழில்துறை அமைச்சராக இருந்தார்.
2011ல் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

இவர், கடந்த 2003ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை நீலகிரி மாவட்ட செயலாளராக இருந்தார்.
இப்போது, திமுக தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளராக உள்ளார்.
இந்த தேர்தலில் குன்னூர் தொகுதியில் வெற்றி பெற்று வனத்துறை அமைச்சர் ஆகி உள்ளார்.


* அர.சக்கரபாணி உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை

பிறந்த தேதி: 14.04.1961
சொந்த ஊர்: காளியப்பகவுண்டன்பட்டி கள்ளிமந்தையம், ஒட்டன்சத்திரம் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.
கல்வித்தகுதி: பி.ஏ (பொருளாதாரம்)

குடும்பம்: மனைவி ராஜலட்சுமி, குழந்தைகள் நிவேதா, தீப்தா
அரசியல்: 1980 - 1983 வரை கல்லூரியில் மாணவர் திமுக உறுப்பினர்
1986 - 1996 வரை திமுக கிளை செயலாளர்

1993 - மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்,  
1997 - தலைமை பொதுக்குழு உறுப்பினர்
1999 - 2003 வரை திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர்
2006-2011 வரை அரசு தலைமை கொறடா

2011 முதல் தற்போது வரை சட்டமன்ற திமுக கொறடா.
1996 முதல் தற்போது வரை 6வது முறையாக ஒட்டன்சத்திரம் எம்எல்ஏ.
2014 முதல் தற்போது வரை திண்டுக்கல் மேற்கு மாவட்ட
திமுக செயலாளர்.

வி.செந்தில்பாலாஜி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை

பிறந்த தேதி: 21.10.1975
சொந்த ஊர்: கரூர் மாவட்டம்
கல்வித்தகுதி: தொழில்: டெக்ஸ்டைல்ஸ்

குடும்பம்: மனைவி, ஒரு மகள்
அரசியல்: அதிமுகவில் மாவட்ட மாணவரணி செயலாளகவும், மாவட்ட செயலாளராகவும் இருந்தார். பின்னர், 2011ல் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2011-ல் இருந்து 2016-ல் எம்.எல்.ஏ.வாகி 5 ஆண்டுகள் போக்குவரத்துறை அமைச்சர் பதவி வகித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குபின் 2019-ல் தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது.
2021 கரூர் சட்டமன்ற தேர்தலுக்காக தீவிரமாக களப்பணியாற்றினார். அந்த வகையில், கரூர் தொகுதியில் வெற்றி பெற்று மின்சாரத்துறை அமைச்சராகி உள்ளார்.

ஆர்.காந்தி  கைத்தறி மற்றும் துணிநூல் துறை

பிறந் தேதி: 5.9.1946
சொந்த ஊர்: ரயில்வே ஸ்டேஷன் ரோடு, ராணிபேட்டை.
கல்வி தகுதி: எஸ்.எஸ்.எல்.சி

தொழில்: கல்வி நிறுவனம், ஓட்டல், கல்குவாரி.
குடும்பம்: மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் ஷில்பா
அரசியல்: 1963 ஆம் ஆண்டு திமுகவில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார்.
1996ம் ஆண்டு ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

பின்னர் 2006ல் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2011ம் ஆண்டு தோல்வியை சந்தித்தார். 2016ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது, ராணிபேட்டை மாவட்ட செயலாளராகவும், தலைமை சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினராகவும் பொறுப்புகளை வகிக்கிறார். இந்த தேர்தலில் ராணிபேட்டையில் வெற்றி கைத்தறி துறை அமைச்சராக தேர்வாகி உள்ளார்.

பி.கே.சேகர்பாபு: இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை

பிறந்த தேதி: 10-1-1963
சொந்த ஊர்: சென்னை, ஆர்.கே.நகர்
குடும்பம்: மனைவி சாந்தி, மகன்கள் விக்னேஷ். ஜெசிமன், மகள் ஜெசிமா.
கல்வித் தகுதி: எஸ்.எஸ்.எல்.சி.

அரசியல்: அதிமுக சார்பில் 2001 மற்றும் 2006ல் ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வென்றார். 2016ல் துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து மீண்டும் அதே தொகுதி அவருக்கு வழங்கப்பட்ட நிலையில், பாஜக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

இவர் திமுக  மாவட்ட செயலாளராக வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் பதவி ஏற்ற பின்பு கடந்த சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதிகளிலும், இந்த முறை 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது மாவட்டத்துக்குள் கொளத்தூர், துறைமுகம், எழும்பூர், திருவிக நகர், வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய தொகுதிகள் உள்ளது. கட்சி நிகழ்ச்சிகளை வெகு விமரிசையாக  நடத்துவதில் தனி முத்திரை பதித்தவர்.

எஸ்.எஸ்.சிவசங்கர்: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

பிறந்த தேதி: 17.7.1969
சொந்த ஊர்: குன்னம், அரியலூர் மாவட்டம்
கல்வித்தகுதி: என்ஜினீயர்

தொழில்: விவசாயம்
குடும்பம்: மனைவி, 2 மகன்கள்
அரசியல்: இவர், பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவராக 1996 முதல் 2001 வரை இருந்துள்ளார். பின் அரியலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக 2001 முதல் 2006 வரை இருந்துள்ளார். தொடர்ந்து 2006ம் ஆண்டு ஆண்டிமடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இதனையடுத்து குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2011ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி  பெற்றார். 2016ல் அரியலூர் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றியை இழந்தார். இப்போது கட்சியில், ஒன்றிய கழக செயலாளராகவும் மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். மேலும் பெரம்பலூர் மாவட்ட தடகள சங்கத்திலும், தமிழ்நாடு சிலம்பம் சம்மேளன தலைவராக இருந்துள்ளார். தற்போது குன்னம் தொகுதியில் வெற்றி பெற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக தேர்வாகி உள்ளார்.

பி.மூர்த்தி: வணிகவரி மற்றும் பதிவுத்துறை

பிறந்த தேதி: 02.01.1959
சொந்த ஊர்: வெளிச்சநத்தம், மதுரை மாவட்டம்.
கல்வித்தகுதி: பி.ஏ.

குடும்பம்: மனைவி செல்லம்மாள் (முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல்), மகன்கள் தியானேஷ், திலக்.
அரசியல்: 2006-2011ல் சோழவந்தான் எம்எல்ஏ
2016-2021ல் மதுரை கிழக்கு எம்எல்ஏ.

தற்போது மதுரை வடக்கு மாவட்ட செயலாளர்,
கடந்த 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில்
மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏ.
இயற்கை விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர். அரசியல் பணியோடு விவசாயமும் செய்து வருகிறார். பொது சேவையில் ஈடுபாடு கொண்டவர்.

மா.சுப்பிரமணியன்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை

பிறந்த தேதி: 1-6-1959
பிறந்த ஊர்: வாணியம்பாடி
கல்வித் தகுதி: பி.ஏ, எல்எல்பி.,
குடும்பம்: மனைவி, ஒரு மகன்.

அரசியல்: தென் சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளராக பதவி வகித்து வரும் மா..சுப்பிரமணியன் 2006-2011 காலகட்டத்தில் சென்னையின் மாநகர மேயராக இருந்தார். 2016ல் சைதாபேட்டை தொகுதியில் போட்டியிட்டு சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கிண்டி தொழிற்குடியிருப்பில் வாழும் இவர் 1999ல் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.

1996-2006 காலகட்டத்தில் சென்னை மாநகராட்சி அவைத்தலைவராக இருந்தார். இவருக்கு உடற்பயிற்சி நிலையத்தில் உடற்பயிற்சி செய்தல், திரைப்படங்கள், யோகா போன்றவற்றில் ஆர்வம் உண்டு. இவர் ஒரு மாரத்தான் வீரரும் கூட, தனது முதல் மாரத்தானை 2014 ஆம் ஆண்டு புதுச்சேரி ஆரோவிலில் நடந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர், இதுவரை 100 மாரத்தான் போட்டிகளைக் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழனிவேல் தியாகராஜன்: நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை

பிறந்த தேதி: 07.03.1966
சொந்த ஊர்: மதுரை.
கல்வித்தகுதி: எம்எஸ், எம்பிஏ, பிஎச்டி,.

குடும்பம்: தந்தை மறைந்த முன்னாள் தமிழக சபாநாயகர் பிடிஆர் பழனிவேல்ராஜன், தாயார் ருக்மணி அம்மாள், மனைவி மார்க்ரேட் மீனாட்சி,
அரசியல்: மாநில திமுக தகவல் தொழில்நுட்ப அணிச்செயலாளர், கடந்த 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ.

இவரது தாத்தா பி.டி.ராஜன் நீதிக்கட்சியின் தலைவராக இருந்தவர். சென்னை மாகாண முதல்வராக 1936ல் பதவி வகித்துள்ளார். இவரது தந்தை பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் 3 முறை தமிழக சட்ட சபை உறுப்பினராகவும். 1996 முதல் 2001வரை சபாநாயகராகவும் பதவி வகித்தார். பழனிவேல் தியாகராஜன் ஆராய்ச்சிக்கான பட்டம் பெற்று வெளிநாடுகளில் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் உயர் பதவி வகித்துள்ளார்.

சா.மு.நாசர்: பால்வளத் துறை

பிறந்த தேதி: 21-10-1959
சொந்த ஊர்: ஆவடி, காமராஜ் நகர், புத்தர் தெரு.
கல்வித் தகுதி: எஸ்எஸ்எல்சி
குடும்பம்: மனைவி பாத்திமா கனி,  மகன் ஆசிம் ராஜா.

அரசியல்: கடந்த 40ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இவர், கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றவர். தற்போது திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். 2001- 2006 மற்றும் 2011 -2016 ஆகிய 10ஆண்டுகளில் ஆவடி நகரமன்ற தலைவராக பதவி வகித்துள்ளார். 4 முறை ஆவடி நகர செயலாளராகவும், ஒருங்கிணைந்த திருவள்ளூர் -காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகவும், சென்னை- காஞ்சிபுரம் மாவட்ட பால் கூட்டுறவு சங்க தலைவராகவும் பதவி வகித்து வந்துள்ளார்.

ஆவடி நகரமன்ற தலைவராக நாசர், 10ஆண்டுகளாக பதவி வகித்து வந்த போது, குடிநீர், சாலை, தெருவிளக்கு, சுகாதாரம், பூங்காக்கள், எரிவாயு தகன மேடைக்கள், பள்ளி கட்டிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகர மக்களுக்கு நிறைவேற்றி கொடுத்துள்ளார்.

செஞ்சி கே.எஸ்.மஸ்தான்: சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை

பிறந்த தேதி: 31.5.1955
சொந்த ஊர்: தேசூர்பாட்டை, விழுப்புரம்
கல்வித்தகுதி: எஸ்.எஸ்.எல்.சி.

தொழில்: முழுநேர அரசியல்
குடும்பம்: மனைவி, 3 மகள்கள், ஒரு மகன்

அரசியல்: 1976-ல் தி.மு.க.வில் இணைந்தார். பின்னர், செஞ்சி பேரூர் செயலாளர், பொதுக்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட அவைத்தலைவர் பதவிகளை வகித்துள்ளார். 1986 முதல் 2016 வரை 5 முறை செஞ்சி நகர மன்ற தலைவராக இருந்துள்ளார். 1996ல் கடலூர் - விழுப்புரம் மாவட்ட பால்வள தலைவராகவும், 1996ல் செஞ்சி விவசாய கூட்டுறவு வங்கி தலைவராகவும் பணியாற்றினார். 2014-ல் இருந்து விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். தற்போது செஞ்சி தொகுதியில் வெற்றி பெற்று சிறுபான்மை நலத்துறை அமைச்சராகி உள்ளார்.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி: பள்ளிக் கல்வி துறை

பிறந்த தேதி: 2.12.1977
சொந்த ஊர்: திருவெறும்பூர், திருச்சி மாவட்டம்
கல்வித்தகுதி: எம்.சி.ஏ.
தொழில்: விவசாயம்

குடும்பம்: மனைவி, 2 மகன்கள்
அரசியல்: பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தந்தை அன்பில் பொய்யாமொழி சட்டமன்ற உறுப்பினராகவும், தாத்தா அன்பில் தர்மலிங்கம் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளனர். 44 வயதான மகேஷ் பொய்யாமொழி இளைஞரணி மாநில துணை செயலாளராக பணியாற்றினார்.

கடந்த ஆண்டு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். இதைத்தவிர்த்து கைப்பந்து கழக கவுரவத் தலைவர், திருச்சி விமான நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர், பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் குமு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்து வருகிறார். தற்போது, திருவெறும்பூர் தொகுதியில் வெற்றி பெற்று கல்வித்துறை அமைச்சர் ஆகி உள்ளார்.


மா.மதிவேந்தன்: சுற்றுலாத்துறை

பிறந்ததேதி: 25.12.1984
சொந்த ஊர்: அபிராமி கார்டன், ராசிபுரம்
குடும்பம்: மனைவி டாக்டர் சிவரஞ்சனி, மகள் தன்யா   
கல்வி தகுதி: எம்பிபிஎஸ். எம்.டி

அரசியல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரான மதிவேந்தனின் தந்தை டாக்டர் மாயவன் திமுக பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இவர் ஏற்கனவே திமுக சார்பில் ராசிபுரம் எம்பி, எம்எல்ஏ தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். டாக்டர் மதிவேந்தன், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரும், முன்னாள் சமூக நலத்துறை அமைச்சருமான சரோஜாவை 1,925 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். ராசிபுரம் பகுதியில் ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு குறைந்த செலவில் சிறந்த மருத்துவம், ஏழை, எளிய மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்கி பாராட்டு பெற்றுள்ளார். இவரது தாயார் சாந்தி, சகோதரர் மணிபாரதி ஆகியோரும் டாக்டர்களாக உள்ளனர்.

த.மனோ தங்கராஜ்: தகவல் தொழில்நுட்பத் துறை

பிறந்த தேதி:1.6.1967
சொந்த ஊர்: பாலூர், கருங்கல், கன்னியாகுமரி மாவட்டம்
பெற்றோர்: தங்கராஜ், ஜாய் தங்கச்சி.
கல்வி தகுதி: எம்.ஏ., எம்.பில். (ஆங்கில இலக்கியம்)

அரசியல்: 1996 முதல் 2006 வரை குமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்.
குமரி திமுகவில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர். கிள்ளியூர் ஒன்றிய செயலாளர். 2014ல் குமரி மேற்கு மாவட்ட செயலாளர். தேசிய பேரிடர் மேலாண்மை நீர் மட்ட குழுவில் உறுப்பினர்.

மாநில திட்டக்குழுவில் ஊரக வளர்ச்சி பிரிவில் 5 வது நிதிக்குழு உறுப்பினர். சட்ட பேரவை உறுதிமொழி குழு உறுப்பினராக 3 ஆண்டுகள் பணி. சட்ட விதிமுறை குழு உறுப்பினராக 2 ஆண்டுகள் பணி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். தற்போது 2 வதுமுறையாக பத்மநாபபுரத்தில் வெற்றி பெற்று, அமைச்சராகி உள்ளார்.

சி.வி.கணேசன்: தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டு துறை

பிறந்த தேதி: 16.6.1959
சொந்த ஊர்: திட்டக்குடி, கடலூர் மாவட்டம்
கல்வித்தகுதி: எம்.ஏ., பிஎட், பி.எல்.
தொழில்: விவசாயம்
குடும்பம்: மனைவி, ஒரு மகன், 3 மகள்கள்

அரசியல்: 1985ம் ஆண்டு கல்லூரி மாணவராக தி.மு.க.வில் இணைந்தார். 1989ல் திட்டக்குடியில் போட்டியிட்டு வென்றார். அதன்பின், மங்களூர் ஒன்றிய திமுக செயலாளர் மற்றும் 4 முறை மாவட்ட துணை செயலாளர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக 1996ல் இருந்து ஒன்றரை ஆண்டுகள் பதவி வகித்தார். அப்போது, நடந்த ஆட்சி கவிழ்ப்பால் பதவி இழந்தார். 2014-முதல் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளராக இருந்து வருகிறார். தற்போது, திட்டக்குடி தொகுதியில் வென்று தொழிலாளர் நலத்துறை அமைச்சராகி உள்ளார்.

சிவ.வீ.மெய்யநாதன்: சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை

பிறந்த தேதி: 9.10.1969
சொந்த ஊர்: ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
கல்வித்தகுதி: எம்.சி.ஏ.

தொழில்: விவசாயம்
குடும்பம்: மனைவி, ஒரு மகன், ஒரு மகள்

அரசியல்: இளம் வயதில் இருந்தே தி.மு.க.வில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். அந்த வகையில், இரண்டு முறை ஊராட்சி மன்ற தலைவராகவும், இரண்டு முறை அறந்தாங்கி ஒன்றிய சேர்மனாகவும் பதவி வகித்தார். கடந்த 2016ம் ஆண்டு முதல் ஆலங்குடியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். தற்போது, ஆலங்குடியில் இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி சுற்றுச்சூழல், மாசுக்கட்டுபாடு, இளைஞர் நலன், விளையாட்டு துறைக்கு அமைச்சராகி உள்ளார்.

என்.கயல்விழி செல்வராஜ்: ஆதிதிராவிடர் நலத்துறை

பிறந்த தேதி: 3.6.68
சொந்த ஊர்: கரூர். வசிப்பது- தாராபுரம்
கல்வித்தகுதி: எம்.காம், பி.எட்.

தொழில்: ஆசிரியை (ஓய்வு)
குடும்பம்: கணவர், 2 மகன்கள்

அரசியல்: இவரது கணவர் வழக்கறிஞர் செல்வராஜ் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளராக உள்ளார். அதனால், இவரும் தி.மு.க.வில் அரசியல் பணி மேற்கொண்டு வந்தார்.
க செல்வராஜ், தாராபுரம் தொகுதியில் கடந்த 2016 தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தார். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இம்முறை, கயல்விழிக்கு தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் வெற்றி பெற்று ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகி உள்ளார்.

Tags : Chief Minister , Chief Minister, Ministers Biodata
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...