புதுடெல்லி: பிரதமரின் ஏழைகள் நல உதவித் திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பங்களுக்கு 2 மாதங்களுக்கு ரேஷன் உணவுப் பொருள்களை இலவசமாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், மே, ஜூன் ஆகிய 2 மாதங்களுக்கு இலவசமாக ரேஷன் உணவுப் பொருள்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஏழைக் குடும்பங்களின் பொருளாதார சிரமங்களைத் தணிப்பதற்கு இந்த அறிவிப்பு உதவும்.
இந்தத் திட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்கு 5 கிலோ உணவு தானியம் வீதம், 79.88 கோடி பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். 80 லட்சம் டன் உணவு தானியம் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும். இவற்றை இலவசமாக வழங்குவதால் அரசுக்கு ரூ.25,332.92 கோடி செலவாகும்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.