×

கணவர் இறந்த சில மணி நேரத்தில் மனைவியும் உயிரிழப்பு: எர்ணாவூரில் சோகம்

திருவொற்றியூர்: எர்ணாவூரில் நெஞ்சுவலியால் கணவர் இறந்த சில மணி நேரத்தில் மனைவியும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாவூரை சேர்ந்தவர் தியாகராஜன் (63). ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். இவரது  மனைவி ராஜலட்சுமி (53). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ராஜலட்சுமிக்கு சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தியாகராஜன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவரது  மகன், மகள் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய் ராஜலட்சுமியை பார்த்துவிட்டு வீடு திரும்பினர்.

அப்போது, தந்தை பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் உடனே அவரை  தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள்  பரிசோதனை செய்து பார்த்தபோது  மாரடைப்பால் தியாகராஜன் இறந்தது தெரியவந்தது. இது தெரிந்தால் தாயின் மனது வேதனைப்படும் என்பதால் யாரும் அவருக்கு தெரிவிக்கவில்லை. இருப்பினும் சிகிச்சை பெற்று வந்த ராஜலட்சுமி, தியாகராஜன் இறந்த  சில மணி நேரத்தில் இறந்துவிட்டார். இதுகுறித்து எர்ணாவூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் எர்ணாவூர் சுற்றுவட்டார பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Ernakulam , Wife dies within hours of husband's death: Tragedy in Ernakulam
× RELATED நீடாமங்கலத்தில் விவசாய சங்கத்தினர்...