திருவாரூர்: திருவாரூர் குளுந்தான் குளத்தில் வளர்ந்துள்ள ஆகாய தாமரை செடிளை அகற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளங்களில் பரவி கிடக்கும் ஆகாய தாமரை நீரை அதிக அளவில் உறிஞ்சி நீர்நிலைகளின் தன்மையை அழித்து விடுகிறது. இதனால் எந்த பயனும் இல் லாமல் போய் விடுகிறது. ஆகாய தாமரை, உயிர்வாழ தண்ணீரை எளிதில் ஆவியாக்கி நீர்நிலையை வறண்டு போக வைத்து விடுகிறது. ஆகாய தாமரை நீரை ஆவியாக்கும் தன்மை கொண்டது. தண்ணீரில் மிதக்கும் இந்த தாவரம், தனது வேர்கள் தண்ணீரில் படர்ந்து வளர்வதன் மூலம் தொடர்ந்து நீர் நிலைகள் முழுவதும் பரவி விடுகிறது. மிக கனமாகவும், பசுமையானதாகவும் இலைகளை கொண்டிருக்கும் இந்த தாவரம் ஊதா நிறத்திலான பூக்களை கொண்டது.
இதன் தண்டிலிருந்து புறப்படும் கிளைகள், விரைவில் புதிய செடியாக பரவும். இந்த தாவரம் நீர் நிலைகளில் தோன்றி, விரைவில் பரவும். இவை தண்ணீ ரை எளிதில் ஆவியாக்குவதால், குளம், குட்டைகள் விரைவில் வறண்டு விடும். இதனால் இந்த ஆகாயத்தாமரைகள் விவசாயத்துக்கு மிகவும் ஊறு விளைக்கும் ஒரு தாவரமாக திகழ்கிறது. இந்நிலையில், திருவாரூர் நகரத்தில் உள்ள குளுந்தான் குளத்தில் ஆகாய தாமரை செடிகள் மண்டி புதர்போல் காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக குளுந்தான் குளத்தை மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த நிலையை மாற்றி இக்குளத்தில் உள்ள ஆகாய தாமரைகளை கோடை காலத்தை பயன்படுத்தி முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.