×

5,146 தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டு பணி நீட்டிப்பு: அரசு உத்தரவு

சென்னை: அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் நடுநிலைப் பள்ளிகளில் 5,146 தற்காலிக ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டவர்களின் பதவி காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 2011-12ம் நிதியாண்டில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 5 முதல் 6ம் வகுப்புகளுக்கு நியமனம் செய்ய 1282 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு நியமனம் செய்ய 1581 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 6428 கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2000ன்படி, 2011-2012ம் நிதியாண்டில், தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு நியமனம் செய்யப்பட்ட 1581 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 5146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 2.12.2012 முதல் 31.12.2020 வரை தொடர் நீட்டிப்பு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த 5146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசாணையின்படி 1.1.2018 முதல் 31.12.2020 வரை வழங்கப்பட்ட தொடர் நீட்டிப்பு முடிவடைந்ததால் அப்பணியிடங்களுக்கு 1.1.2021 முதல் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை வந்தது.

தொடக்கக் கல்வி இயக்குநரின் கருத்துருக்களை அரசு கவனமுடன் ஆய்வு செய்து, 5146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு புதிய ஊதிய விகிதத்தின்படி 1.1.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டுகளுக்கு அல்லது தொடர் நீட்டிப்பு குறித்து நிதி துறையின் மறு ஆய்வின் முடிவெடுக்கும் வரை இதில் எது முந்தியதோ அதுவரை தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கலாம் என முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Extra 3-year extension for 5,146 temporary teachers: Government order
× RELATED சட்டமன்ற நிகழ்வு நேரலை வழக்கு ஒத்திவைப்பு