ஊட்டி: ஹாலாந்து நாட்டின் மலர்களான காலா லில்லி மலர் செடிகள் இம்முறை புதிதாக தாவரவியல் பூங்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் பாத்திகளிலும், ெதாட்டிகளிலும் நடவு செய்யப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மலர் செடிகள் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ளன. இவை பல வண்ணங்களில் பூக்கத்துவங்கியுள்ளன.
ஆண்டிற்கு ஆண்டு மலர் கண்காட்சியின் போது சில புதிய வகை மலர்களும் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். இம்முறை ஹாலாந்து நாட்டு மலர்களான காலா லில்லி மலர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மலர்களின் கிழங்குகள் ஹாலாந்து நாட்டில் இருந்து வாங்கப்பட்டு தாவரவியல் பூங்காவில் உள்ள தொட்டிகளில் நடவு செய்யப்பட்டன. தற்போது பூங்காவில் உள்ள 350 தொட்டிகளில் இந்த மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
பூங்காவில் உள்ள நர்சரி மற்றும் கண்ணாடி மாளிகையில் இந்த மலர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஆனால், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பூங்காவிற்குள் செல்ல அனுமதிக்க முடியாத நிலையில், இந்த அழகிய மலர்களை காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.