×

ரத்தினபுரி, சரவணம்பட்டி காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி ஊர் மக்கள் கலெக்டரிடம் மனு

கோவை, ஏப். 4: கோவை கலெக்டரிடம் கண்ணப்ப நகர், காமராஜபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த சில மாதங்களாகவே கண்ணப்பநகர் மற்றும் காமராஜபுரம் என்றாலே ரத்தினபுரி மற்றும் சரவணப்பட்டி போலீஸ் நிலைய அதிகாரிகள் பொய் வழக்குகள் போட்டு வருகின்றனர். சாதாரணமாக சாலையில் நடந்து சென்றாலே அழைத்து விசாரித்து ஊர் பெயர் காமராஜபுரம் அல்லது கண்ணப்பநகர் என்று சொன்னாலே, போலீஸ் நிலையம் இழுத்துசென்று பொய் வழக்கு போட்டு விடுகிறார்கள். சில சமயங்களில் இரு போலீஸ் நிலைங்களிலும் ஒரே நேரத்தில் ஒருவருடைய பெயரிலேயே பொய் வழக்கு போட்டு விடுகிறார்கள்.

நாங்கள் அனைவரும் தினக்கூலி வேலைதான் பார்த்து வருகிறோம். எங்களது குடும்பமும் நடுத்தர குடும்பங்கள்தான். எங்கள் ஊரில் உள்ள சிறுவர்களின் மீதும் பொய் வழக்கு போட்டு அவர்களின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக ஆக்கிவிடுகிறார்கள். எங்கள் ஊர் சிறுவர்களுக்கு அனைத்து சாதி நண்பர்களும் உள்ளனர். காவலர்கள் மேற்கண்ட சிறுவர்களிடம் சென்று காமராஜபுரம், கண்ணப்பநகரில் உள்ளவர்கள் கீழ் சாதியினர் அவர்களிடம் இனி சேரக்கூடாது. இன்னொரு முறை அவர்களிடம் நீங்கள் சேர்ந்தால் அவர்களைப் போலவே உங்கள் மீதும் பொய் வழக்கு போட்டு விடுவோம் என்று கூறி வளர்ந்து வரும் சமூகத்தில் சாதி வார்த்தைகளை திணித்து மிகவும் இழிவாக பேசுகிறார்கள்.

இவ்வாறு குழந்தைகளிடம் சாதியை பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்ட பெரியவர்கள், பெண்களை நோக்கி இழிவாக பேசியும், வயது வித்தியாசம் பர்க்காமல் 50க்கும் மேற்பட்டவர்கள் மீதும் பொய் வழக்குகளையும் போட்டு வருகின்றனர். ரத்தினபுரி, சரவணம்பட்டி போலீஸ் அதிகாரிகள் மீது சட்ட ரீதியாகவும் துறை ரீதியாகவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

The post ரத்தினபுரி, சரவணம்பட்டி காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி ஊர் மக்கள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Ratnapura, Saravanambati Police Station ,Collector of People ,Govina, Ab. 4 ,Goa ,Kapa Nagar ,Kamarajapuram ,Dinakaran ,
× RELATED திருப்பூர் ஜீவாநகரில்...