×

திமுகவுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய திருச்சி

திருச்சி: திருச்சி என்றதும் மலைக்கோட்டை மாநகர் என்று தான் அனைவருக்கும் நினைவில் வரும். ஆனால் திமுகவினருக்கோ மாநாட்டின் தலைநகர் என்ற நினைப்பு தான் வரும். காரணம் இங்குதான் ஏற்கனவே 5 திமுக மாநாடுகள் நடந்துள்ளது. திமுக 17.9.1949ல் சென்னையில் பெரியாரின் பிறந்தநாளன்று தொடங்கப்பட்டது. பொதுச்செயலாளராக பேரறிஞர் அண்ணா தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு 1952 பொதுத்தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. 1957 பொதுத்தேர்தல் வரவிருந்த நிலையில் திமுக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டது.

இந்தநிலையில் 1956 மே 17 முதல் 20 வரை திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் திமுகவின் 2வது மாநில மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் தான் திமுக தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என்று நிர்வாகிகளிடம் கருத்தறியும் வகையில் மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் 2 பெட்டிகள் வைத்தது. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பவர்கள் மஞ்சள் பெட்டியிலும், வேண்டாம் என்பவர்கள் சிவப்பு பெட்டியிலும் வாக்களித்தனர். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று 56,942 பேரும், வேண்டாமென்று 4,203 பேரும் வாக்களித்தனர்.

பெரும்பாலான நிர்வாகிகளின் கருத்துக்கு ஏற்ப திமுக தேர்தலில் போட்டியிட்டது. 1957ல் முதன்முதலில் தேர்தலை சந்தித்த திமுக 1967ல் ஆட்சியை பிடித்தது. எனவே, திமுகவை அரியணையில் ஏற்றி பல்வேறு மகத்தான திட்டங்களை செயல்படுத்த காரணமாக அமைந்தது மாநாட்டு தலைநகர் திருச்சி. திருச்சியில் மாநாடு நடத்தினால் திமுக வெற்றி பெறும் என்று ஒரு சென்டிமென்ட் ஆக திமுகவினர் கருதுகின்றனர். அதன்படி, தேர்தலுக்கு முன் திமுக மாநாடு சிறுகனூரில் நடத்த பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டது. கொரோனா மற்றும் தேர்தல் நடைமுறைகள் காரணமாக தேர்தலுக்கு முன் மார்ச் 7ம் தேதி மாநாடு போல் பிரமாண்டமான சிறப்பு கூட்டம் நடந்தது.

இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திமுகவின் 7 அம்ச திட்டங்களை அறிவித்தார். இந்நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் வகையில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் இமலாய வெற்றி பெற்றதால் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகிறார். இதனால் திருச்சியில் மாநாடு போல் பிரமாண்ட சிறப்பு பொதுக்கூட்டம் நடத்தியது தான் திமுக மீண்டும் அரியணை ஏற காரணமாக அமைந்துள்ளது என்று பலரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Tags : Trichy ,DMK , Trichy marked a turning point for DMK
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...