தஞ்சாவூர், ஏப்.4: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அனைத்து ரேஷன் கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்பட உள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12 உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை அரவை செய்த அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் கலந்து தயார் செய்யப்படுகிறது. இதன் மூலம் ரத்த சோகையை தடுக்கலாம். ரத்த உற்பத்திக்கும், நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கும் செறிவூட்டப்பட்ட அரிசி உதவுகிறது.
இந்நிலையில் நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் செறிவூட்டப்பட்ட அரிசியால் தயாரான உணவை சாப்பிட்டார். இதனைத் தொடர்ந்து செறிவூட்டப்பட்ட அரிசியால் தயார் செய்யப்பட்ட உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு பரிமாறப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post தஞ்சாவூரில் செறிவூட்டப்பட்ட அரிசியால் தயாரான உணவை ருசித்து பார்த்த கலெக்டர் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு appeared first on Dinakaran.