×

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 13 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 13 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் கலெக்டர் ஆர்த்தி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில், பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 270 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளி எஸ்.வினோத் என்பவர் மளிகை கடை வைக்க கூட்டுறவுத்துறை சார்பில், வையாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் ரூ.50,000க்கான காசோலையினையும், உத்திரமேரூர் வட்டம், சிறுபினாயூர், கிளக்காடி, பேரணக்காவூர், அகரம்துளி, நாஞ்சிபுரம் மற்றும் காரணை ஆகிய கிராமத்தை சார்ந்த 13 பயனாளிகளுக்கு ரூ.9,75,000 மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும் கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

மேலும், தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் வாள்வீச்சு போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற லதா, சங்கீதா ஆகியோர் கலெக்டர் ஆர்த்தயிடம் வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெய, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் 13 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா கலெக்டர் ஆர்த்தி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Collector ,Aarti ,Kanchipuram ,People's Grievance Day ,Kanchipuram… ,People's Grievance Meeting ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரத்தில் தொழில், வர்த்தக...