×

வைக்கோல் ஏற்றிச்சென்ற மினிவேன் தீயில் கருகியதுஆரணி அருகே பரபரப்புமின்கம்பியில் உரசியதால் விபத்து

ஆரணி, ஏப்.4: ஆரணி அருகே மின்கம்பி உரசியதில் வைக்கோல் ஏற்றிச்சென்ற மினிவேன் தீயில் கருகி சேதமானது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(50), மினிவேன் உரிமையாளர். இவரது டிரைவர் விக்ரம்(29) நேற்று ஆரணி அடுத்த மொரப்பந்தாங்கல் கிராமத்திற்கு வைக்கோல் ஏற்றிவர மினிவேனை எடுத்து சென்றுள்ளார். பின்னர், அங்குள்ள விவசாய நிலத்தில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு கண்ணமங்கலத்திற்கு செல்வதற்காக வேனை ஓட்டிக்கொண்டு புறப்பட்டார். அப்போது, விவசாய நிலத்தில் இருந்த மின்கம்பி மீது வேனில் இருந்த வைக்கோல் உரசியது. இதனால், மின்சாரம் பாய்ந்து வேனுடன் வைக்கோல் மளமளவென எரிய தொடங்கியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் மற்றும் கூலி தொழிலாளிகள் அலறி அடித்துக்கொண்டு வேனில் இருந்து தப்பியோடினர். உடனே, அங்கிருந்த விவசாயிகள் கலவை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த கலவை தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ஏழுமலை தலைமையிலான வீரர்கள் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் மினிவேன், வைக்கோல் முற்றிலும் தீயில் கருகி சேதமானது. இதுகுறித்து, ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post வைக்கோல் ஏற்றிச்சென்ற மினிவேன் தீயில் கருகியது
ஆரணி அருகே பரபரப்பு
மின்கம்பியில் உரசியதால் விபத்து
appeared first on Dinakaran.

Tags : Arani ,Thiruvannamalai district ,Polur ,Dinakaran ,
× RELATED போளூரில் விவசாயிகள் பயன்பெறும்...