சிறப்பு செய்தி
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டிற்கான நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் புதிய அறிவிப்புகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கடந்த 1ம் தேதி வெளியிட்டார். அதில் தென்சென்னைக்கான இரண்டு முக்கிய திட்டங்களான சென்னை மாநகரில் பெருகி வரும் தகவல் தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு செய்யப்பட்டு வருகின்றன. ராஜிவ் காந்தி சாலை போன்ற சேவைச் சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலையை அடுத்து தொழில்நுட்ப விரைவு சாலையாக மேம்பாடு செய்யப்படும்.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை நடப்பாண்டில் தயாரிக்கப்படும் என அறிவித்திருந்தார். மேலும், கிராண்ட் சதர்ன் டிரங்க சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், பல்லாவரம் மேம்பாலத்தை தாம்பரம் – மதுரவாயல் விரைவுசாலையுடன் திருநீர்மலை வழியாக இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான தனி ஆலோசகரும் நியமிக்கப்பட உள்ளார். தற்போது இரண்டு வழிச்சாலை மட்டுமே உள்ளதால் வானங்களை முந்திச் செல்ல கடினமாகவும், இடவசதியின்றி நெரிசலாகவும் காணப்படுகிறது. எனவே சாலையில் நடுவில் தூண்கள் மூலம் மேம்பாலம் அமைக்கப்படும் என எதிர்ப்பார்க்க படுகிறது.
இந்த பகுதியில் குடியிருப்புகள் மற்றும் கடைகள் மட்டுமின்றி சிறு தொழிற்சாலைகளும் உள்ளன. தனியார் நிலங்களை கையகப்படுத்தப்படுவது என்பது குறைந்தது 5 ஆண்டுகள் ஆகலாம். இதனால் திட்டப்பணியின் முன்னேற்றத்தை தாமதப்படுத்தலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு திட்டமான பல்லாவரம் – துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையை தொழில்நுட்ப விரைவு சாலையாக மேம்படுத்தப்படுகிறது. ராஜிவ்காந்தி சாலையில் புதிய காய்வாய்கள், பேருந்து நிழற்குடைகள், சாலை விரிவாக்கம், முறையான சர்வீஸ் சாலைகள், நடைமேடைகள் அமைக்கவும், பயணத்தின் போது ஏற்படும் குளறுபடிகளை சரிசெய்யவும் நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.
இதனுடன் சாலையோர இயற்கையை ரசித்தல் மற்றும் மரம் வளர்ப்பு பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டி சாலையை ஓஎம்ஆர் சாலையுடன் இணைக்கும் திட்டம் என்பது மிகவும் வரவேற்கத்தக்க திட்டமாகும். இதனால் ரியல் எஸ்டேட் கட்டமைப்பு மேலும் வளரக்கூடும். மேலும் முன்னணி நிறுவனங்கள் தங்களின் அலுவலகங்கள் அமைத்து வருகின்றனர். இதனால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாகவும் விரைவில் செல்லக்கூடிய வகையில் அமைகிறது.
The post போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையுடன் பல்லாவரம் மேம்பாலத்தை இணைக்க திட்டம்: சாத்தியக்கூறுகள் ஆய்வு appeared first on Dinakaran.