புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கியதில் இருந்து அதானி குழும முறைகேடு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் தொடர்ந்து முடங்கி வருகிறது. வார விடுமுறைக்குப் பின் நேற்று காலை மாநிலங்களவை கூடியதும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி செய்தனர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும், நிறுவனங்கள் போட்டி சட்ட திருத்த மசோதாவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே இந்த மசோதா எந்த விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்ட உடனே அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே போல மக்களவையிலும் கடும் அமளி தொடர்ந்ததால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று மகாவீர் ஜெயந்தியையொட்டி இரு அவைகளுக்கும் விடுமுறை என்பதால் நாளை மீண்டும் நாடாளுமன்றம் கூடும்.
The post அதானி விவகாரத்தில் அமளி நாடாளுமன்றம் முடங்கியது appeared first on Dinakaran.