×

ஆவடி அருகே தவறவிட்ட ஏடிஎம் கார்டு, ரூ.2,000 உரியவரிடம் ஒப்படைப்பு

ஆவடி: ஆவடி அடுத்த அண்ணனூரில் ஏடிஎம் அருகே தவறவிட்ட ஏடிஎம் கார்டு, ரூ.2 ஆயிரம் பணம் ஆகியவற்றை, ஏடிஎமில் பணம் எடுக்க வந்தவர் உரியவரிடம் ஒப்படைத்தார். ஆவடி அடுத்து அண்ணனூர் ரயில் நிலையம் செல்லும் 60 அடி சாலையில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம்மிற்கு வந்தவர் ரூ.2,000 எடுத்துக்கொண்டு, வெளியே சென்றவர் ஏடிஎம் அருகேயே ரூ.2,000 மற்றும் ஏடிஎம் கார்டை தவறவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், அண்ணனூர் பகுதியை சேர்ந்த என்.மாரியப்பன் ரமேஷ். முதலமைச்சர் உள்பட்ட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்த ஏடிஎமில் பணம் எடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது, எடிஎம் கார்டும், ரூ.2,000 பணமும் கீழே கிடந்துள்ளது.

அதனை எடுத்துக்கொண்டு, அருகில் இருந்த இருசக்கர வாகன மெக்கானிக் கடைக்கு சென்று, ஏடிஎம் கார்டை யாராவது தேடி வந்தால், எனது செல்போனுக்கு, தொடர்பு கொள்ளும்படி, போன் நம்பரை எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். அப்போது, சிறிது நேரம் கழித்து 6வது சிறப்பு காவல் படையில் பணியாற்றும் அசாருதீன், ஏடிஎம் கார்டு மற்றும் பணம் காணவில்லை என்று ஏடிஎம் அருகே தேடிக் கொண்டிருந்தார். இதனைபார்த்த மெக்கானிக் அவரை அழைத்து, கொடுத்த தகவலின்பேரில் அசாருதீன், மாரியப்பன்ரமேஷின் செல்போனுக்கு தொடர்புகொண்டு, ஏடிஎம் கார்டை நான்தான் தொலைத்துவிட்டேன் என்று கூறினார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மாரியப்பன் ரமேஷ், அசாருதீனிடம் ரூ.2,000 பணத்தையும், ஏடிஎம் கார்டையும் ஒப்படைத்தார்.

The post ஆவடி அருகே தவறவிட்ட ஏடிஎம் கார்டு, ரூ.2,000 உரியவரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Avadi ,Aavadi ,Annanur ,Dinakaran ,
× RELATED ஆவடி அருகே நகைக்கடைக்குள் புகுந்து...