×

பங்குனி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பொன்னேரி: பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கும்மமுனிமங்களம் கிராமத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அகத்திய மாமுனி இத்தலத்திற்கு வருகை தந்து ஈஸ்வரனை போற்றிப்பாடிய வரலாற்று சிறப்புவாய்ந்த இக்கோயிலின் பங்குனி மாத பிரம்மோற்சவ பெருவிழா கடந்த செவ்வாயன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது.

முன்னதாக அகத்தீஸ்வர பெருமானுக்கும் ஆனந்தவள்ளி தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு புஷ்பரத தீப ஆரத்தி காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து விநாயகர், சண்டிகேஸ்வரர், முருகன் வள்ளி தெய்வானை புடைசூழ சிவபெருமான் பார்வதி தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில் வந்தமர்ந்தார். திருத்தேரில் சிவபெருமானுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டதை தொடர்ந்து கைலாய வாத்தியம் இசைக்க, மேளதாளம் முழங்க, பக்தர்கள் ஓம் நமசிவாயா என்ற கோஷத்துடன் தேரை மிகுந்த உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். நகரின் முக்கிய வீதிகளில் பார்வதி தாயாருடன் திருத்தேரில் பவனி வந்த சிவபெருமானை பக்தர்கள் கண்டு களித்தனர். இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

The post பங்குனி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Agatheeswarar Temple ,Therthiru ,Vija ,Brahmotsavam ,Panguni ,Ponneri Agatheeswarar ,temple ,Panguni month Brahmotsavam ,Temple Therthiruviza ,Dinakaran ,
× RELATED அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு...