×

10ம் வகுப்பு தேர்வு துவங்க உள்ளதால் ஹயக்ரீவர் கோயிலுக்கு மாணவர்கள் வருகை அதிகரிப்பு

செங்கல்பட்டு: 10ம்வகுப்பு தேர்வு துவங்க உள்ளதால்,ஹயக்ரீவர் கோயிலுக்கு மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு அடுத்த செட்டிபுண்ணியம் கிராமத்தில் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட கல்வி கடவுள் என்று பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் ஆலயம் அமைந்துள்ளது. தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் ஒரு ஹயக்ரீவர் ஆலயம் அமைந்துள்ளது. அதற்கடுத்து மிகப்பழமையான புராண காலத்து ஆலயமான இந்த செட்டிபுண்ணியம் ஸ்ரீயோக ஹயக்ரீவர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு தினசரி காலை 8மணிமுதல் மதியம் 10 மணி வரையிலும் மாலை 4மணிமுதல் 8மணி வரையிலும் ஆலயம் செயல்படும். ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 7மணிமுதல் மதியம் 12.30 மணிவரையிலும், மாலை 4மணிமுதல் இரவு 8.30மணி வரையிலும் செயல்படும்.

10முதல் 12 ம் வகுப்புகளுக்கான தேர்வுகளின் போது மாணவர்களின் வருகையை கருத்தில் கொண்டு ஆலயம் கூடுதலாக செயல்படும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று குழந்தைகளை எல்கேஜி வகுப்பில் சேர்ப்பதற்கு முன்பாக இந்த ஆலயத்திற்கு குழந்தையை அழைத்து வந்து பெற்றோர் குழந்தையின் கையை பிடித்து ஆலயத்தின் சுவற்றில் பிள்ளையார் சுழி போட்ட பிறகு பள்ளியில் சேர்ப்பது வழக்கமாக கொண்டுள்ளனர். மாணவர்கள் தேர்வு நேரங்களில் இங்கு வந்து நோட்டு, புத்தகம், பென்சில் ரப்பர், உள்ளிட்ட கல்வி உபகரணங்களை புதியதாக வாங்கி பெருமாளின் பாதத்தில் வைத்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்துவிட்டு அந்த கல்வி உபகரணங்களை மாணவ மாணவிகள் தனது கல்விக்கு பயன்படுத்துவார்கள்.

கடந்த 10 நாட்களாக 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதாலும் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவங்க இருப்பதாலும் செட்டிபுண்ணியம் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் ஆலயத்தில் செங்கல்பட்டு மாவட்டம் அல்லாது சென்னை திருவள்ளூர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று மாணவ மாணவிகள் தங்களது பெற்றோருடன் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று புதிய கல்வி உபகரணங்களை வாங்கி பெருமாளின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து பெற்றுக்கொண்டதோடு ஆலயம் முழுவதும் சுவர், மரம் என ஆலய வளாகம் முழுவதிலும் தேர்வு எண்ணை எழுதி வைத்து அதிக மதிப்பெண் எடுத்து சாதிப்பதாக மாணவ மாணவிகள் நம்பிக்கையுடன் சென்றனர்.

இதுகுறித்து, மாணவ மாணவிகள் கூறும்போது, ‘‘ நாங்கள் ஆண்டுதோறும் தேர்வு நேரங்களில் இந்த ஆலயத்திற்கு வந்த கல்வி உபகரணங்களை பெருமாள் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து தேர்வு எண்ணை சுவற்றில் எழுதி ஹயக்ரீவ பெருமாளிடம் எங்களது வேண்டுதலை வைத்துவிட்டு நம்பிக்கையுடன் தேர்வு எழுதுவோம். இதனால் எங்களது வேண்டுதல் நிறைவேறுகிறது.’’என நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

The post 10ம் வகுப்பு தேர்வு துவங்க உள்ளதால் ஹயக்ரீவர் கோயிலுக்கு மாணவர்கள் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Hayagrivar temple ,Chengalpattu ,Chettipunnyam ,
× RELATED செங்கல்பட்டில் பைக் திருடன் அதிரடி கைது