×

சட்டவிரோதமாக செயல்படும் கனிமவள குவாரிகள் மீது வழக்குபதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: ‘‘தமிழ்நாட்டில் சட்டவிரோத கனிமவள குவாரிகள் எதுவும் செயல்படவில்லை’’ என்று அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. விழுப்புரம் அடுத்த மரக்காணத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மரக்காணம் தாலுக்காவில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் மற்றும் தனியார் பட்டா நிலங்களில் பல்வேறு கனிமவளங்கள் உள்ளது. அதில், நல்முக்கல் மற்றும் கீழ் அரங்குணம் கிராமங்களில் அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள கனிம வளங்களை மாவட்ட நிர்வாகம் 5 முதல் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் என்ற பெயரில் தனியாருக்கு குத்தகைக்கு விட்டுள்ளது.

நல்முக்கல் கிராமத்தில் குத்தகை எடுத்தவர்களின் காலம், கடந்த 2019ல் முடிந்தது. ஆனால், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயகரமான வெடிப்பொருட்களை உபயோகித்து பாறைகளை உடைத்து சட்டவிரோதமாக கனிம வளங்களை எடுத்து வருகின்றனர். சுற்றுச்சூழல் துறை அனுமதி இல்லாமல் இயங்கும் இதுபோன்ற ஆலைகளால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து கடந்த ஏப்ரலில் அரசுக்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், குத்தகை காலம் முடிந்து சட்டவிரோதமாக இயங்கும் குவாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அரசு பீளிடர் பி.முத்துகுமார் தமிழ்நாட்டில் சட்டவிரோத கனிமவள குவாரிகள் எதுவும் செயல்படவில்லை. சட்டவிரோதமாக செயல்பட்ட குவாரிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து அரசு விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

The post சட்டவிரோதமாக செயல்படும் கனிமவள குவாரிகள் மீது வழக்குபதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: ஐகோர்ட்டில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Govt ,ICourt ,CHENNAI ,Tamil Nadu ,Villupuram ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை...