×

இரண்டு கோடி இலக்குடன் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற வேண்டும்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்குடன் திமுகவின் உறுப்பினர் எண்ணிக்கையை இரு மடங்காக்கும் புதிய உறுப்பினர் சேர்ப்பு நிகழ்வு அனைத்துப் பகுதிகளிலும் விரைவாக, முழுமையாகவும் நடைபெற வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்திடுவோம் என்று தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் என்ற பொறுப்பை சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நான், திமுகவின் முதன்மை உடன்பிறப்பு. நம்மைவிட மூத்த உடன்பிறப்பாக பொதுச்செயலாளர். இன்னும் எண்ணற்றவர்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள். இளைய உடன்பிறப்புகளும் இயக்கத்தின் நிறைந்திருக்கிறார்கள். ஆண் – பெண் பேதமின்றி அனைத்து பாலினத்தவருக்கும் இடமளிக்கும் இயக்கம் இது. திருநங்கையரும் உறுப்பினராகி, மக்கள் பிரதிநிதிகளாக உள்ளாட்சி அமைப்புகளில் திறம்பட இயங்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது தலைவர் கலைஞர் கட்டிக் காத்த கழகம்.

முத்தமிழறிஞர் கலைஞருக்கு அவருடைய நூற்றாண்டு தொடக்க விழாவில் நாம் செலுத்தும் நன்றியாக, உடன்பிறப்புகளாம் உறுப்பினர்களை இருமடங்காக்கி, இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டவேண்டும் என்று கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்தைச் செயலலில் நிறைவேற்றிக் காட்டுகின்ற இயக்கம் தான் திமுக. அதனடிப்படையில், ‘உடன்பிறப்புகளாய் இணைவோம்’ என்ற முழக்கத்துடன் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி ஏப்ரல் 4ம் தேதி(இன்று) முதல் நடைபெறவிருக்கிறது.

கொளத்தூர் தொகுதியில் நான் நேரடியாக இதனைத் தொடங்கி வைக்க இருக்கிறேன். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் உட்பட்ட தொகுதிகளில் ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, கிளை வாரியாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி முனைப்பாக நடைபெறவிருக்கிறது. திமுகவில் உறுப்பினர் சேர்க்கும் பணிக்கு தொகுதிப் பார்வையாளர்கள்் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பிரதிநிதிகளாக உள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர், இந்த உறுப்பினர் சேர்ப்பு நிகழ்வில் திமுக நிர்வாகிகளுடன் இணைந்து பங்கேற்று செயலாற்றிட வேண்டும். ஒவ்வொரு நாளும் மாலை நேரத்திலோ, வார இறுதி நாட்களிலோ, மற்ற விடுமுறை நாட்களிலோ மக்களை நேரடியாக சந்தித்து, இரண்டாண்டுகால திமுக அரசின் சாதனைத் திட்டங்களை எடுத்துச் சொல்லி, ‘உடன்பிறப்புகளாய் இணைவோம்’ என அன்பழைப்பு விடுத்து, அவர்களின் முழு விருப்பத்துடன் உறுப்பினர்களாக சேர்த்திட வேண்டும்.

வீடு வீடாகச் சென்று மக்களை சந்தியுங்கள். கொரோனோ பேரிடர் காலத்தில் வழங்கப்பட்ட ரூ.4,000 நிவாரண தொகை, மளிகைத் தொகுப்பு, பொங்கல் பரிசுத் தொகை உள்ளிட்டவை மக்களிடம் முறையாகச் சென்று சேர்ந்ததை உறுதி செய்யுங்கள். மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து பயணம், காலை உணவு திட்டம் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் திட்டங்கள் அன்றாடம் நிறைவேற்றப்படுவதை அவர்களிடம் எடுத்துரையுங்கள். வருகிற செப்டம்பர் 15 முதல் மாதம் ஆயிரம் ரூபாய், ஒரு கோடி குடும்பத் தலைவியருக்கு வழங்கப்பட இருப்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள். பெண்களின் சுயமரியாதையைக் காத்திடும் திராவிடக் கருத்தியல் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்த இருப்பதையும் எடுத்துக்கூறுங்கள்.

‘நான் முதல்வன்’ திட்டம் வாயிலாக மாணவர்களின் திறன் மேம்படுத்தப்பட்டு அவர்கள் நல்ல வேலைக்குச் செல்ல வாய்ப்பு அமைவதை விளக்கிச் சொல்லுங்கள். பெண்களும் இளைஞர்களும் பெருமளவில் திமுகவின் உறுப்பினராகும் வகையில் உங்களுடைய பரப்புரை அமைய வேண்டும். அதற்கேற்ப துண்டறிக்கைகள் வழங்க வேண்டும். மக்கள் அதிகமாகக் கூடுகிற பகுதிகளிலும் உறுப்பினர் சேர்ப்பு முகாம்களை நடத்தலாம். உறுப்பினர் கட்டணம் பத்து ரூபாய். வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரமாகக் கொண்டே உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். புதிய உறுப்பினரின் அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, உறுப்பினர் அட்டை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இணையவழியாகவும்(www.udanpirappu.com) உறுப்பினராக சேரலாம். அவர்களின் விவரங்களும் மாவட்ட கழகத்தினரால் சரிபார்க்கப்பட்ட பிறகே உறுப்பினர் அட்டை வழங்கப்படும். இவற்றைக் கவனத்தில் கொண்டு உறுப்பினர் சேர்ப்பு பணியை திறம்பட மேற்கொள்ள வேண்டுகிறேன்.

இரண்டு கோடி உடன்பிறப்புகள் என்ற இலக்குடன் திமுகவின் உறுப்பினர் எண்ணிக்கையை இருமடங்காக்கும் புதிய உறுப்பினர் சேர்ப்பு நிகழ்வு அனைத்து பகுதிகளிலும் விரைவாகவும் சரியாகவும்-முழுமையாகவும் நடைபெற வேண்டும். உங்களின் முனைப்பான உழைப்பினால் இரண்டு கோடிக்கும் மேலாக திமுகவின் உறுப்பினர் எண்ணிக்கை உயர்ந்து நிற்கும் என்ற நம்பிக்கை உங்களில் ஒருவனான எனக்கு முழுமையாக இருக்கிறது. திமுகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்களும், திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் பயன் பெற்றவர்களும்-பெற இருப்பவர்களும் புதிய உறுப்பினர்களாக விரும்பி இணையும்போது, திமுகவின் வலிமை பெருகும். அது அடுத்தடுத்த தொடர் வெற்றிகளுக்கு உத்தரவாதத்தை வழங்கும்.

தற்போதுள்ள ஒரு கோடி உறுப்பினர்களுடன் மேலும் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்து அதன் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு விரைந்து அனுப்பிட வேண்டும். கோட்டம் போல உயர்ந்து நிற்க வேண்டும் புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை. உடன்பிறப்புகளாய் இணைவோம்.. தமிழர்களாய் தலைநிமிர்வோம்.. தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்திடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் பயன் பெற்றவர்களும்-பெற இருப்பவர்களும் உறுப்பினர்களாக விரும்பினால் திமுகவின் வலிமை பெருகும்.

The post இரண்டு கோடி இலக்குடன் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற வேண்டும்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister of the ,CM. G.K. Stalin ,Chennai ,Dumuku ,Chief Minister ,B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...