×

கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம ஆசாமி

  • ரயிலில் இருந்து குதித்த 3 பேர் பலி
  • 4 பேர் கவலைக்கிடம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நேற்று முன்தினம் இரவு ஓடும் ரயிலில் பயணிகள் மீது மர்ம ஆசாமி ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் உயிர் தப்பிப்பதற்காக ஓடும் ரயிலில் இருந்து குதித்த இரண்டரை வயது குழந்தை உள்பட 3 பேர் பேர் இறந்தனர். தீ காயம் அடைந்த 4 பேர் ஆஸ்பத்திரியில் கவலைக்கிடமாக உள்ளனர். 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கேரள மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் இடையே எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9.30 மணி அளவில் கோழிக்கோடு அருகே எலத்தூர் ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டது. அப்போது டி2 பெட்டியில் இருந்து டி1 பெட்டிக்கு சிவப்பு சட்டை, தொப்பி அணிந்தவாறு ஆசாமி ஒருவர் வந்தார். கையில் 2 பிளாஸ்டிக் பாட்டில்களையும் வைத்து இருந்தார்.

டி2 பெட்டியில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் மட்டுமே இருந்தனர். திடீரென மர்ம ஆசாமி கையில் இருந்த பாட்டில்களை திறந்து இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள் மீது ஊற்றி தீ வைத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது. உடனே தீ மளமளவென பற்றியது. சுதாரித்துக் கொண்ட மர்ம ஆசாமி அங்கிருந்து வேறு பெட்டிக்கு தப்பி ஓடிவிட்டார். தீ பிடித்தவுடன் பயணிகள் அலறினர். தொடர்ந்து சிலர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதற்கிடையே ஒரு குழந்தையுடன் 3 பேர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்தனர். இது குறித்து அறிந்ததும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

தொடர்ந்து தீ காயம் அடைந்த 9 பேரை மீட்டு அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ரயிலில் இருந்து குதித்த 3 பேரின் சடலங்கள் தண்டவாளம் அருகே கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ரயிலில் இருந்து குதித்த கண்ணூரை சேர்ந்த நவுபிக், ரஹ்மத், அவரது தங்கை ஜசீலா மகள் இரண்டரை வயதான சஹரா என்பது தெரியவந்தது. பயணிகள் மீது தீ வைத்தவுடன் பயந்து 3 பேரும் ரயிலில் இருந்து கீழே குதித்த போது இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

அவரது உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தீ காயம் அடைந்தவர்களில் கண்ணூரை சேர்ந்த அனில்குமார் (50), மகன் அத்வைத் (21) உள்பட 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து மத்திய உளவுத்துறை அமைப்புகளும் உடனே விசாரணையை தொடங்கியுள்ளது. ஒன்றிய நுண்ணறிவுத்துறை (ஐபி) மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பை (என்ஐஏ) சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.

தாக்குதல் நடத்தியது உ.பி ஆசாமியா?
போலீசார் தீ வைத்த நபரின் வரைபடம் மற்றும் அந்த நபரின் பேகில் கிடைத்த பொருட்களை வைத்து நடத்திய தீவிர விசாரணையில் தாக்குதல் நடத்திய உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த ஷாரூக் ஷெய்பி ஆக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இவர் கடந்த சில ஆண்டுகளாக ேகாழிக்கோட்டில் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.
இதற்கிடையே இந்த நபர் கண்ணூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. தீ வைத்த போது இவர் உடலிலும் தீக்காயம் ஏற்பட்டிருக்கலாம்.

அதற்காக சிகிச்சை பெற்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். போலீசார் கைப்பற்றிய போனில் சிம்கார்டு எதுவும் இல்லை. கடைசிய மார்ச் 30ம் தேதி ேபான் பயன்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளியை பிடிக்க சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அஜித்குமார் மேற்பார்வையில் மலப்புரம் குற்றபிரிவு எஸ்பி விக்கிரமன் தலைமையில் 18 பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டைரியில் தமிழக ஊர் பெயர்கள்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர பரிசோதனையில் எலத்தூர் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் ஒரு பேக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே பேக்கை கைப்பற்றி போலீசார் பரிசோதித்தனர். அதில், பெட்ரோல் நிரப்பிய ஒரு பிளாஸ்டிக் பாட்டில், ஒரு டிபன் பாக்ஸ், ஒரு செல்போன் உள்பட சில பொருட்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்ட ஒரு டைரியும் அதில் இருந்தது.

அதில், கன்னியாகுமரி, குளச்சல், திருவனந்தபுரம், சிறையின்கீழ், கழக்கூட்டம் உள்பட சில இடங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தப் புத்தகம் தண்ணீரில் நனைந்திருந்ததால் பல எழுத்துக்கள் அழிந்து போயிருந்தன. ரயிலை தீ வைத்த மர்ம ஆசாமியின் பேக்காக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

The post கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம ஆசாமி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Kozhikode ,
× RELATED வேலை கேட்டா கடலுக்கு அடியில் போய் நாடகமாடும் மோடி: ராகுல் காந்தி தாக்கு