×

நான்கு நாள் இடைவெளிக்குப் பின்னர் கூடிய நாடாளுமன்றம் 14வது நாளாக இன்றும் முடங்கியது..!! ..

டெல்லி : நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஏப்.5 காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்டக்கூட்டத் தொடர் மார்ச் 13ம் தேதி தொடங்கியது . கூட்டம் தொடங்கிய நாள் முதல் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசியது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த முறை நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியதிலிருந்து இரண்டு அவைகளிலும் எந்த முக்கியமான விவாதங்களும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 4 நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் நாடாளுமன்றம் இன்று கூடியது. மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் மார்ச் 29ம் தேதி காலமான பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஷ் பாபட்-க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் மாநிலங்களவை திங்கள் கிழமை காலையில் கூடியதும், அன்றைய அலுவல்களைப் பட்டியலிடும்படி மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் அழைப்பு விடுத்தார்.ஆனாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும், மோடி, அதானி பெயர்களைக் கூறி முழக்கங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து மாநிலங்களவையும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் இரு அவைகளும் 2 மணிக்கு கூடியதும் மீண்டும் ராகுல்காந்தி விவகாரத்தில் இன்றும் அமளி நீடித்தது.சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு காங்கிரஸ் எம்.பிக்கள் முழக்கம் எழுப்பியதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஏப்.5 காலை வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்தார். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி, நாளை மகாவீரர் ஜெயந்தி விடுமுறை காரணமாக நாடாளுமன்றம் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 14-வது நாளாக முடங்கியது.

The post நான்கு நாள் இடைவெளிக்குப் பின்னர் கூடிய நாடாளுமன்றம் 14வது நாளாக இன்றும் முடங்கியது..!! .. appeared first on Dinakaran.

Tags : Parliament ,Delhi ,Houses of Parliament ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு