×

திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் திட்டம்: தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது

சென்னை: திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் திட்டம் தமிழகம் முழுவதும் இன்று காலை தொடங்கியது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மாதம் 22ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில், ஏற்கனவே ஒரு கோடி உறுப்பினர்களை கொண்ட திமுக பேரியக்கத்தில், புதிதாக மேலும் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் பெருமுயற்சியை ஏப்ரல் 3ம் தேதியன்று தொடங்கி ஜூன் 3ம் தேதி கலைஞர் நூற்றாண்டு தொடங்குவதற்குள் இப்பணியை நிறைவேற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்தை நிறைவேற்றிடும் வகையில், ‘‘துண்­டறிக்கைகள் மூலமாகவும், திண்ணை பிரசாரங்கள் மூலமாகவும் முக்கிய இடங்களில் முகாம்கள் அமைப்பது மூலமாகவும், வீடு ேதாறும் தேடிச் சென்றும் புதிய உறுப்பினர்களை திமுகவில் இணைத்திடுவோம்” எனவும் மாவட்ட செயலாளர்கள் கூட்­டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தொடர்ந்து திமுக பொது செயலாளர் துரைமுருகன், ஏப்ரல் 3ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை, “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மற்றும் திமுக பவளவிழா ஆண்டு” உறுப்பினர்களை சேர்த்தல் பணிகளை ‘‘உடன்பிறப்புகளாய் இணைவோம்” என்ற மாபெரும் முன்னெடுப்புடன் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும் என தலைமை கழகம் முடிவு எடுத்துள்ளதால் திமுகவினர் குறிப்பிட்ட தேதி முதல் உறுப்பினர்களை சேர்க்கும் பணியை தொடங்கி உடனுக்குடன் படிவங்களை தலைமை கழகத்தில் சேர்ப்பிக்க வேண்டும் என அறிவித்தார்.

அதன்படி திமுகவில் 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் திட்டம் தமிழகம் முழுவதும் இன்று காலை தொடங்கியது. உதகையில் பொது செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இதே போல அந்தந்த மாவட்டத்தில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உறுப்பினர் சேர்த்தல் பணியை தொடங்கி வைத்தனர். உறுப்பினர் சேர்த்தலில் ஆர்வமாக ஏராளமானோர் வந்து விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர்.

The post திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் திட்டம்: தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : DMK ,Tamil Nadu ,CHENNAI ,DMK District ,Dinakaran ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம்...