மாட்ரிட்: மாட்ரிட் மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட ஜப்பானின் ஒசாகா, பெலாரசின் சபாலங்கா ஆகியோர் தகுதிப் பெறுள்ளனர்.ஸ்பெயினில் ‘மாட்ரிட் மகளிர் ஓபன்’ டென்னிஸ் போட்டி நடக்கிறது. இப்போது ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிகின்றன. அதன் ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபாலங்கா(உலகளவில் 7வது ரேங்க்), ரஷ்ய வீராங்கனை வேரா ஜவோனாரேவா(37வது ரேங்க்) ஆகியோர் விளையாடினர். சுமார் ஒரு மணி 6 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் சபாலங்கா 6-1, 6-2 என நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் கிரீஸ் வீராங்கீனை மரியா சாக்கரி(19வது ரேங்க்) உடன் அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா(38வது ரேங்க்) ஆகியோர் மோதினர். முதல் செட்டில் மரியாவை ஒரு புள்ளி கூட எடுக்கவிடாமல் அசத்தலாக விளையாடிய அமண்டா 6-0 என்ற கணக்கில் கைப்பற்றினார். அதனால் சுதாரித்துக் கொண்ட மரியா அடுத்த 2 செட்களையும் 6-1, 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தினார். ஒரு மணி 49 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் 2-1 என்ற செட் கணக்கில் வென்ற மரியா 2வது சுற்றுக்கு தகுதிப் பெற்றார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா(2வது ரேங்க்), சக நாட்டு வீராங்கனை மிசாகி டோயை(79வது ரேங்க்) எதிர்கொண்டார். அதில் 7-5, 6-2 என நேர் செட்களில் போராடி வென்ற ஒசாகா 2வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் ஒரு மணி 27 நிமிடங்கள் நடந்தது.