சென்னை: சுற்றுச்சூழல் துறை செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தலைமையில் 7 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ஜோசப் பெலார்மின் அன்டன் சூரிஸ் (தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் துணை தலைமை வேதியியலாளர்) மற்றும் இரண்டு சுற்றுச்சூழல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கண்காணிப்பு குழுவினர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுவார்கள். கண்காணிப்பு குழு அனுமதி பெற்ற நபர்கள் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்ல வேண்டும். இந்த குழு தலைவர், ஆலையை முழுமையாக கண்காணித்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தமிழக அரசுக்கு அறிக்கை அளிப்பார். உச்ச நீதிமன்றம் விதித்துள்ள பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தையும் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை வருகிற ஜூலை 31ம் தேதி வரை (3 மாதம்) மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்படும்.