அண்ணாநகர்: சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (60). இவரது மகன் ஆறுமுகம் (38). இவருக்கு மனைவி மற்றும் 12 வயதில் ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையே கடந்த 25-ம் தேதி இவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், இருவரும் மருத்துவ சிகிச்சைக்காக திருவண்ணாமலைக்கு கிளம்பி சென்றனர். அப்போது, வீட்டில் பாட்டி சாந்தியுடன் 12 வயது சிறுமி தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நீண்ட நேரம் காணவில்லை என்பதால், கோயம்பேடு போலீசில் பாட்டி சாந்தி புகார் அளித்தார். இதற்கிடையே நேற்றிரவு பேத்தியை தேடியபோது, அங்குள்ள 17 வயது சிறுவனின் வீட்டிலிருந்து அழுதபடி வெளியே வருவதை கண்டு சாந்தி அதிர்ச்சியானார்.
பேத்தியிடம் பாட்டி விசாரித்தபோது, தன்னை வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருக்கிறாள். இதுகுறித்து தகவலறிந்த கோயம்பேடு போலீசார் விரைந்து வந்து சிறுவனிடம் விசாரித்தபோது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.