×

ஆன்லைன் ரம்மியால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார் சொத்தை விற்று கடனை அடைக்க முயன்ற அண்ணனை கொன்ற தம்பி: தூத்துக்குடியில் பயங்கரம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஆன்லைன் ரம்மி விளையாடி லட்சக்கணக்கான பணத்தை இழந்த அண்ணனை தம்பியே அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள சில்லாநத்தம் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் நல்லதம்பி (34), லாரி டிரைவர். இவர், ஏற்கனவே லாரி வைத்து தொழில் செய்து வந்தார். அவ்வப்போது ஆன்லைன் ரம்மியும் விளையாடி வந்துள்ளார். தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதாலும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு காரணமாக பணத்தை இழந்ததாலும் நல்லதம்பி பல இடங்களில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் நல்லதம்பி அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் தனது தம்பி முத்துராஜிடமே பணம் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதனை திருப்பி கொடுப்பது தொடர்பாக, அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தொடர்ந்து கடன் அதிகரித்ததால், நல்லதம்பி சில்லாங்குளத்தில் உள்ள ஒரு நிலத்தை விற்று கடனை அடைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இது முத்துராஜிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நல்லதம்பியை, முத்துராஜ் தனது உறவினருடன் சேர்ந்து காரில் பண்டாரம்பட்டி அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. ஆத்திரமடைந்த முத்துராஜ், இரும்பு கம்பியால் நல்லதம்பியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் நல்லதம்பி சரிந்து விழுந்து இறந்தார். பின்னர் முத்துராஜிம், உறவினரும் காரில் தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி முத்துராஜை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கொடுக்கல், வாங்கல் தகராறில் அண்ணனை தம்பியே அடித்துக்கொலை செய்த சம்பவம், தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஆன்லைன் ரம்மியால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார் சொத்தை விற்று கடனை அடைக்க முயன்ற அண்ணனை கொன்ற தம்பி: தூத்துக்குடியில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...