×

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி... ஆந்திராவில் கையில் பணம் இல்லாததால் சிகிச்சை மறுக்க பட்ட பெண் உயிரிழப்பு

ஸ்ரீகாகுளம் : வங்கி கணக்கில் பணம் இருந்தும் கையில் ரொக்கமாக பணம் இல்லாத காரணத்தால் அனுமதிக்க மறுத்த மருத்துவமனை வாயிலிலேயே பெண் ஒருவர் உயிரை விட்டது பரிதாபத்திலும் பரிதாபமாகி உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் தான் இந்த பதறவைக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அஞ்சலி என்பவரை அவரது உறவினர்கள் அங்கு உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சிகிச்சை அளிக்க ஒப்புக்கொண்ட நிர்வாகம் உடனடியாக முன்பணம் செலுத்த கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் அஞ்சலியின் கைவசம் பணம் இல்லை. அதற்கு பதிலாக வங்கிக்கணக்கில் பணம் இருப்பதால் இணையதளம் மூலமாக பணத்தை செலுத்துவதாக கூறியும் மருத்துவமனையில் அவரை அனுமதிக்கவில்லை. இதையடுத்து உறவினர்கள் அவசர அவசரமாக அஞ்சலியை மருத்துவமனை வாயிலில் அமரவைத்து விட்டு பணத்தை தயார் செய்ய சென்றுள்ளனர்.

மூன்று மணி நேரம் கழித்து பணத்துடன் திரும்பிய உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அஞ்சலி இருந்த இடத்திலேயே இறந்துகிடந்துள்ளார். உரிய சிகிச்சை கிடைத்து இருந்தால் உயிர் பிழைத்து இருக்க வேண்டிய ஒருவர் அல்ப பணத்திற்க்காக உயிரிழந்தது பலரையும் வேதனை அடைய செய்துள்ளது. அதனை அடுத்து அஞ்சலியின் உடலை அப்புறப்படுத்த யாரும் முன்வராத நிலையில், அந்த வழியாக வந்த இரு செய்தியாளர்கள் கவச உடை அணிந்து அஞ்சலியின் உடலை வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். 


Tags : Andhra Pradesh , The case of a woman suffering from corona ... A woman who refused treatment due to lack of cash on hand in Andhra Pradesh
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி