திருப்புவனம்: கொந்தகையில் மர்மக் குறியீடுகளுடன் கூடிய சுடுமண் பானைகள் கிடைத்துள்ளன. பானைகளில் உள்ள குறியீடுகளின் அர்த்தம் என்ன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியை தொடர்ந்து கொந்தகையிலும் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இங்கு 3 குழிகளில் 7 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 3 மற்றும் 4ம் எண் தாழிகளில் உள்ள பொருட்கள் நேற்று வெளியே எடுக்கப்பட்டன. மூன்றாம் எண் தாழியில் எலும்புகள், கருப்பு, சிவப்பு வண்ண சுடுமண் பானைகள், இரும்பு ஆயுதம் உள்ளிட்டவை இருந்தன. சுடுமண் பானைகளில் ஒரே மாதிரியான குறியீடுகள் வரையப்பட்டுள்ளன.
ஒரு சுடுமண் கலயம் 9 செமீ விட்டம், 4.5 செமீ உயரம் உள்ளது. மற்றொரு சுடுமண் கலயம் 14 செமீ விட்டம், 16 செமீ உயரம் உள்ளது. மேலும் சேதமடைந்த நிலையில் சுடுமண் பாத்திரம் கண்டறியப்பட்டுள்ளது. மூன்று பாத்திரங்களிலும் உள்ள குறியீடுகள் எதனை குறிக்கிறது என்பது அடுத்தகட்ட ஆய்விற்கு பின் தெரிய வரும்.கொந்தகையில் கடந்த ஆண்டு நடந்த அகழாய்வில் முதுமக்கள் தாழிகளில் இருந்து இதுபோன்ற கருப்பு சிவப்பு வண்ண பாத்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டன. ஆனால் அதில் குறியீடுகள் இல்லை. தற்போதைய அகழாய்வில் கிடைத்த பாத்திரங்களில் மட்டுமே குறியீடுகள் உள்ளன குறிப்பிடத்தக்கது.