டெல்லி: மாநில அரசுகளுக்கு சீரம் இந்தியா நிறுவனம் விற்கும் கொரோனா தடுப்பூசி விலை 25% குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மாநிலங்களுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி விலை ரூ.400-லிருந்து ரூ.300-ஆக குறைத்து சீரம் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறைப்பு உடனே அமலுக்கு வருவதாக சீரம் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் தற்போது சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி போடுவார் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கோவிஷீல்டு தடுப்பூசி நிறுவனமான, சீரம் இந்தியா நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது மத்திய அரசுக்கு இதுவரை ரூ.150-க்கு விற்கப்பட்டு வந்த கோவிஷீல்டின் விலை, மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 ஆகவும் விலை உயர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஒரேநாளில், ரூ.250 முதல் ரூ.450 வரையில் அதிகரிக்கப்பட்ட இந்த விலை உயர்வால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து கோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்வுக்கு பல்வேறு மாநிலங்கள் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி விலையை ரூ.400-லிருந்து ரூ.300- ஆக குறைப்பதாக சீரம் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் தனியார் மருத்துவமனைக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ. 600 விலையில் எந்த ஒரு மாற்றமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இரண்டு தடுப்பூசி நிறுவனங்களிடமும் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.