பாங்காக்: தாய்லாந்து நாட்டில் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளி பின்பற்றுவது போன்ற கொரோனா வழிகாட்டு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு இந்திய ரூபாயில் ரூ.46,610 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதில், இந்நாட்டு பிரதமரும் சிக்கி இருக்கிறார். இந்நாட்டின் தலைநகர் பாங்காக்கில் நேற்று முன்தினம் தடுப்பூசி கொள்முதல் குறித்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அவர்முகக்கவசம் அணியாமல் இருந்தார். இது, பெரும் சர்ச்சையானது. ‘பிரதமரே முகக்கவசம் அணியாவிட்டால் மக்கள் எப்படி அணிவார்கள்,’ என்று விமர்சனங்கள் கிளம்பின. இந்நிலையில், அவருக்கும் நேற்று ரூ.46,610 அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு, அவரை விடவில்லை. தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது போலீசிலும் வழக்குப் பதியப்பட்டு உள்ளது.