குளித்தலை : கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி பகுதியில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு 24 வார்டுகளில் தூய்மைப் பணியாளர்கள் பொதுமக்களிடம் சேகரித்து அதனை ஓரிடத்தில் சேர்த்து லாரிகளில் கொண்டு செல்வதற்காக பல இடங்களில் கொட்டப்பட்டு அங்கிருந்து கொண்டுசெல்லப்படுகிறது இம்மாதிரி குளித்தலை நகரப்பகுதிகளில் பல இடங்களில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் கொட்டி விட்டு சென்று விடுகின்றனர்.
மேலும் குளித்தலைை உழவர் சந்தையில் இருந்து ரயில்வே கேட் செல்லும் சாலையில் ஓரத்தில் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் கொட்டி விட்டு செல்வதால் அவ்வழியாக சுற்றித்திரியும் மாடுகள், ஆடுகள் ஓரத்தில் இருக்கும் குப்பைகளை இழுத்துக்கொண்டு நடுரோட்டில் தின்று வருகிறது. சமீபத்தில்தான் இந்த சாலை திறந்துவிடப்பட்டது. இதனால் போக்குவரத்து அதிகமாக நிறைந்த பகுதியாக அண்ணாா நகர் புறவழிச்சாலைை இருந்து வருகிறது. இந்நிலையில் சாலையில் குப்பைகளை கொட்டி விட்டுச் செல்வதால் கால்நடைகள் நடுரோட்டுக்கு கொண்டு வந்து அப்படியே போட்டு விட்டு சென்று விடுகிறது.
அதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் வழுக்கி விழும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையை போக்க சுகாதார ஆய்வாளர் நடவடிக்கை எடுத்து நகர்ப்புறத்தில் சேகரிக்கும் குப்பைகளை சாலைை ஓரத்தில் கொட்டாமல் அதற்கென இடம் ஒதுக்கீடு செய்து அவ்விடத்தில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.