அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள அழகர் கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இவ்விழா கடந்த 23ல் துவங்கியது.
கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் காரணத்தால், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி உள்ளிட்ட அனைத்து திருவிழா நிகழ்வுகளும் கோயில் உள் பிரகாரத்திலேயே ஆகம விதிப்படி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று காலை 9.15 மணி முதல் 10 மணிக்குள் கள்ளழகர் திருக்கோலத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இன்று காலை 8 மணிக்கு அழகர் - ஆண்டாளுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து காலை 8.30 மணிக்கு அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு, கோயில் ஆடி வீதி நந்தவனத்தில் உள் விழாவாக நடைபெறுகிறது. இதற்காக செட் அமைத்து மாதிரி வைகை ஆற்றின் வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆடி வீதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கை வைகை ஆற்றில் இன்று காலை குதிரை வாகனத்தில் அழகர் எழுந்தருள்கிறார். பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. நிகழ்வுகளை www.tnhrce.gov.in, www.alagarkoil.org என்ற இணையதளத்தில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டாள் சூடிய மாலை வருகை
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் அணிந்த மாலை, இரண்டு கிளிகள், பட்டு வஸ்திரம் ஆகியவை கோயிலில் இருந்து கூடையில் வைத்து, மாட வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க கொண்டு வரப்பட்டு காரில் மதுரை அழகர்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.