புதுடெல்லி: கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர்கள் பேரணியை விவசாயிகள் நடத்தினர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டம் பெரும் வன்முறையில் முடிந்தது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் நடிகரும், சமூக ஆர்வலருமான தீப் சித்து முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். பாரம்பரியமிக்க செங்கோட்டை சேதப்படுத்தப்பட்டதாக தொல்லியல் துறை அளித்த புகாரின் பேரில் அவர் பிப்ரவரி 9ம் தேதி கைதானார். இவ்வழக்கில் ஏப்ரல் 16ம் தேதி ஜாமீன் பெற்றிருந்த நிலையில், விடுதலை ஆவதற்கு முதல் நாள் மீண்டும் அதே சம்பவம் தொடர்பாக மற்றொரு வழக்கில் டெல்லி போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் நேற்று அவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.