×

அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் ஏன்? முதல்வர் எடப்பாடி விளக்கம்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் பிரிவை மட்டும் தற்காலிகமாக செயல்பட அனுமதி அளிப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேசியதாவது: இந்தியா முழுவதும் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா நோய் தொற்று கடந்த மார்ச் மாதத்தில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை நாளொன்றுக்கு 450 என கண்டறியப்பட்ட தொற்று நோய், தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து இன்றையதினம் சுமார் 15,000 பேர் அளவுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று கூடுதலாக உள்ளது. பெருகிவரும் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், பொருளாதாரம் அதிகளவில் பாதிக்காதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் திரவ ஆக்சிஜன் கொள்ளளவை அதிகரிக்கவும், கோவிட் படுக்கைகள் அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கோவிட்-19 இரண்டாம் அலையின் தாக்கம் கட்டுக்குள் உள்ளது. சில மாநிலங்கள் அளவுக்கு தமிழ்நாட்டில் இந்த நோயின் தாக்கம் அதிகளவில் இல்லை. என்றாலும், இப்போது நாள்தோறும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டிருக்கிற நிலையை பார்க்கிறோம். இருப்பினும், தொடர்ந்து அதிகரித்து வரும் இந்நோய் தொற்றின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, மருத்துவ உட்கட்டமைப்புகளை குறிப்பாக, மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மருத்துவ ஆக்சிஜனை தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.

இந்நிலையில், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 1997 முதல் 2018 வரை இயங்கி வந்த வேதாந்தா தாமிர உருக்காலை நிறுவனம் தமிழ்நாடு அரசால் நிரந்தரமாக முத்திரையிடப்பட்டு, மூடப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உறுதி செய்தது. இந்த தீர்ப்பிற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அந்த நிறுவனம் ஒரு இடைக்கால மனுவை கீழ்க்காணும் வேண்டுகோளுடன் தாக்கல் செய்துள்ளது. “தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்திலுள்ள முக்கிய சொத்துகளை பாதுகாத்து, பராமரிக்க அனுமதிக்க வேண்டும். கொரோனா தாக்கத்தினால், தேவைப்படும் ஆக்சிஜனை தங்களது இரண்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கூடத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு வாயு நிலையிலுள்ள ஆக்சிஜனை 1050 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து அதனை அருகில் இருக்கும் மருத்துவமனைகளுக்கும் மற்றும் நாட்டின் பிற மாநிலங்களில் கோவிட்-19 சிகிச்சைக்கும் தேவைக்கேற்ப இலவசமாக விநியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும்” என கேட்டுள்ளது.

வேதாந்தா நிறுவனம் தங்களது நிறுவனத்தில் உள்ள இரண்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கூடத்தில், உபகரணங்களின் நிலைமைக்கேற்ப 2 அல்லது 4 வாரங்களுக்குள்ளாகவே வாயு நிலையில் உள்ள ஆக்சிஜனை உற்பத்தி செய்து தர முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த இடைக்கால மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது, தமிழக அரசின் நிலைபாட்டை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கிற காரணத்தால், ஒரு முக்கியமான நிலையில், சோதனையான நிலையில் இருக்கிறோம். மக்களுடைய உயிரை காப்பாற்றுவது அனைவருடைய கடமை, அந்த கடமையுணர்வோடு அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தை கூட்டி இருக்கிறோம். இன்றோ (நேற்று), நாளையோ நீதிமன்றத்தில் வழக்கு வருகிற சூழ்நிலை இருக்கிற காரணத்தால், அனைத்து கட்சிகளையும் அழைக்க இயலவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Why an all-party consultative meeting? Chief Edappadi Description
× RELATED பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்துச்...