சின்னமனூர் : சின்னமனூர் பகுதியில் செங்கரும்பு நடவுப்பணி தொடங்கி நடந்து வருகிறது. இதில், சாகுபடியாகும் கரும்புகளை அடுத்தாண்டு அறுவடை செய்வர்.தேனி மாவட்டம், சின்னமனூரில் மார்க்கையன்கோட்டை சாலையில் இருந்து உடையகுளம், செங்குளம், சீலையம்பட்டி வரை சுமார் 200 ஏக்கரில் முல்லைப்பெரியாறு பாசனம் மூலம் செங்கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
இதற்காக சித்திரை 1ம் தேதி வயல்களில் செம்மண்னுடன் மாட்டு எறுவை கலந்து பாத்தி அமைத்து தயார் செய்தனர். வயல்களில் ஒரு துளையில் இரு கரும்பு கனுவை ஒன்றுக்கொன்று ‘வி’ வடிவத்தில் வைத்து பெண் தொழிலாளர்கள் நடவு செய்து வருகின்றனர். இவ்வாறு நடவு செய்யப்படும் செங்கரும்பு 11 மாதங்களில், அதாவது அடுத்தாண்டு தைப்பொங்கலுக்கு அறுவடை செய்யப்படும். சிறு கரும்பு விவசாயிகள் வயல்களை ஒத்தி, உண்டருதிக்கு எடுத்து செங்கரும்பு பயிரிட்டு வருகின்றனர்.