×

ஸ்டெர்லைட் ஆலை திறந்தால் தமிழகம் போர்க்களமாக மாறும்; சட்டம்- ஒழுங்கு சிக்கல் ஏற்படும் : சீமான் எச்சரிக்கை

சென்னை : நாம் தமிழர் கட்சி சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா இரண்டாம் அலை ஏற்படுத்தியிருக்கும் பேரிடர் காலச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்குவதாகக் கூறி நாசகார ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நடக்கும் முயற்சிகள் பேரதிர்ச்சி தருகின்றன. தூத்துக்குடி நிலத்தையும், சூழலியலையும் பாழ்படுத்தி, சுவாசிக்கும் காற்றையே நச்சுக்காற்றாக மாற்றியதோடு மட்டுமல்லாது 14 உயிர்களின் மூச்சுக்காற்றையும் நிறுத்தக் காரணமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலையானது, மக்களின் உயிர்காக்க சுவாசக்காற்றை உற்பத்தி செய்து தருவதாகக் கூறுவது கேலிக்கூத்தானது. மத்திய அரசின் கையாலாகத்தனத்தாலும், மக்கள் நலன் குறித்த அக்கறையின்மையினாலும் நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைக் காரணமாகக் கொண்டு மீண்டும் இயங்குவதற்கு அடித்தளமிடும் ஸ்டெர்லைட் ஆலையின் முயற்சிகளை மொத்தமாய் முறியடிக்க வேண்டும்.

மக்களின் உயிருக்கும், மண்ணின் நலத்துக்கும் முற்று முழுதாகத் தீங்கு விளைவிக்கிற, நச்சு ஆலை என்று உயர் நீதிமன்றத்தாலேயே குறிப்பிடப்பட்ட, சூழலியல் கேடுகளுக்காக 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட கொடிய ஸ்டெர்லைட் ஆலையை எதன்பொருட்டும் மீண்டும் திறக்க அனுமதிக்கக்கூடாது’’என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’கொரோனா காலத்தில் நோய்த்தொற்றுக்கு ஆட்பட்ட நோயாளிகளின் உயிர்களைக் காக்க அவர்களுக்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்ய வேறு வழியே இல்லை என்பது போல ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது குறித்து ஆலோசிப்பது அபத்தமானது; அவமானகரமானது. இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு நாட்டில், ஒரு அவசரத் தேவைக்குச் சுவாசக்காற்றை உற்பத்தி செய்யக்கூட மாற்று வழிகளில்லையா? ஸ்டெர்லைட் ஆலையைவிட்டால் ஆக்சிஜனைக் கொண்டு வர வாய்ப்புகளே வேறு ஏதுமில்லையா? ’’என்று கேட்கும் சீமான்,

’’சட்டத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்தின் வழியாக ஊடுருவப் பார்க்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டிய தமிழக அரசு, நீதிமன்றத்தில் எதிர் நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, தற்போது கருத்துக்கேட்புக் கூட்டம், அனைத்துக் கட்சிக்கூட்டம் என வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாகக் காய் நகர்த்துவது தேவையற்ற சிக்கலையும், பதற்றத்தையும் தமிழகத்தில் உருவாக்கும். 14 உயிர்களைப் பலிகொண்ட அந்த ஆலையை எதன்பொருட்டும் திறப்பதெனும் பேச்சுக்கே இடமில்லை என்பதுதான் மண்ணின் மக்களின் மனநிலையாக உள்ளது. அதனை உணராது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதும், கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்துவதும் தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டிப்பார்ப்பதாக உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக மக்கள் போராடும்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கலந்தாலோசிக்காத இந்த அரசு, இப்போது அனைத்துக் கட்சிக்கூட்டத்தைக் கூட்டுவதே வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவான முன்நகர்வாகத்தான் கருதப்படும். தனது கட்டுப்பாட்டிலிருக்கும் காவல்துறை, தூத்துக்குடியில் 14 உயிர்களைப் பறித்தபோது, ‘தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். எனக்கு எதுவும் தெரியாது’ எனக்கூறி வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக நின்ற தமிழக முதல்வர், இப்போது மறுபடியும் இத்தகைய படுபாதகச்செயலைச் செய்தால் அது தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும்.

தனக்கிருக்கும் அதிகார நெருக்கத்தையும், பணபலத்தையும் கொண்டு யாரையும் வளைத்துப் போட்டுவிடலாம் எனும் மமதையில் ஆலையை மீண்டும் திறந்துவிடக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாக மத்திய அரசு வரிந்துகட்டி நிற்பதும், அதற்கு ஆதரவாக மாநில அரசு முன்முயற்சிகளை முடுக்கி விடுவதும் வெட்கக்கேடானது. தங்கை ஸ்னோலின் உள்ளிட்ட 14 பேரைக் கண்முன்னே துள்ளத்துடிக்கப் படுகொலை செய்திட்ட அரசுகள் இன்றைக்குத் துளியும் மனச்சான்று இல்லாது ஸ்டெர்லைட் ஆலையின் பக்கம் நிற்கத் துணிவது வன்மையான கண்டனத்திற்குரியது’’என்கிறார்.

’’ தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது அரசின் கொள்கை முடிவென அறிவித்து, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கிற வேதாந்தா குழுமத்தின் முன்நகர்வுகளை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இதற்கு மாறாக, தற்காலச் சூழலைக் காரணமாகக் காட்டி, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிகள் நடக்குமேயானால் தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும்; தேவையற்றப் பதற்றமும், சட்டம் ஒழுங்குச் சிக்கலும் ஏற்படும்’’என்று எச்சரிக்கிறார்.

Tags : TN ,Sterlite ,Seaman Warning , நாம் தமிழர் கட்சி சீமான்
× RELATED ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் ரூ.401 கோடி நன்கொடை..!!