டெல்லி: நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு கடிவாளம் போடும் வகையில் தடுப்பூசி பணிகளை வேகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மே 1-ந்தேதி முதல் 3-ம் கட்ட தடுப்பூசி திட்டப்பணிகள் நாடு முழுவதும் தொடங்கப்படுகிறது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிவது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக நீடிக்கிறது.
இந்த நிலையில், நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து ஆக்சிஜன் மையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட தலைநகரங்களில் உள்ள பகுதிகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை உருவாக்கப்படும், புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று பிரதமர் அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.