×

கொரோனா 2வது அலை தீவிரம் துபாய், சார்ஜா, அபுதாபி செல்லும் விமானங்கள் ரத்து

சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் இந்திய பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே தடைவிதித்துள்ளன. இந்நிலையில் துபாய், சார்ஜா, அபுதாபி நாடுகள் நேற்று நள்ளிரவு 12 மணியிலிருந்து அடுத்த 10 நாட்களுக்கு இந்தியாவிலிருந்து தங்கள் நாட்டிற்கான நேரடி விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளது. இதையடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் ஏர்இந்தியா, இண்டிகோ, எமரேட்ஸ், ஃபிளை துபாய் விமானங்களும், அதேபோல் சார்ஜா செல்லும் ஏர்இந்தியா, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும், அபுதாபி செல்லும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, எத்தியாடு ஏர்லைன்ஸ் விமானங்களுமாக மொத்தம் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் அடுத்த 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அந்தந்த விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதேநேரத்தில், ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பி செல்ல  சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள தூதரகங்களில் பணியாற்றும் இந்தியர்கள், அரசு முறையிலான பயணம் செய்பவர்கள், டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், ஐக்கிய அரபு நாடுகள் வழியாக மற்ற நாடுகளுக்கு செல்லும் டிரான்சிஸ்ட் பயணிகள் இந்த சிறப்பு விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவர். இந்த சிறப்பு விமானங்களில் பயணிப்பவர்கள், பயண தேதிக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

ஐக்கிய அரபு நாடுகளில் இறங்கியதும், தங்களை 10  நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த 10  நாட்களில் 4வது மற்றும் 8வது நாளில் பயணிக்கு ஐக்கிய அரபு நாட்டின் சுகாதாரத்துறையினர் 2 முறை கொரோனா மருத்துவ பரிசோதனை நடத்துவார்கள். அதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே அவர்களுடைய நாட்டிற்குள் அனுமதிப்பார்கள். பாசிடிட்வ் ரிசல்ட் வந்தவர்கள் கொரோனா வைரஸ் சிகிச்சை மருத்துவமனையில் சேர்த்து விடுவார்கள். இதேபோன்று, கடுமையான கட்டுப்பாடுகளை  ஐக்கிய அரபு நாடுகள் விதித்துள்ளன.

மேலும், ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்த சிறப்பு விமானங்களில் இந்தியா திரும்பி வருவதற்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. அவர்கள் வழக்கம்போல் சிறப்பு விமானங்களில் சென்னை உள்ளிட்ட இந்தியாவிற்கு செல்லும் விமானங்களில் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளை தொடர்ந்து வளைகுடா நாடுகளான கத்தார், ஓமன், குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகளும் இந்தியாவிற்கான சிறப்பு விமான சேவைகளை ரத்து  செய்துள்ளன.

இதையடுத்து இன்று சென்னைக்கு மஸ்கட்டிலிருந்து வரவேண்டிய ஓமன் ஏர்லைன்ஸ், தோகாவிலிருந்து வரவேண்டிய கத்தார் ஏர்லைன்ஸ், குவைத்திலிருந்து வரவேண்டிய குவைத்  ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதோடு, இலங்கையிலிருந்து சென்னை வரவேண்டிய 2 லங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களும் இன்று ரத்து செய்யப்படுகின்றன. இதற்கு, தமிழகத்தில் இன்று ஞாயிறு  கடைபிடிக்கப்படும் முழு ஊரடங்கும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

Tags : Dubai ,Charga ,Abu Dhabi , Corona 2nd wave intensity flights to Dubai, Sharjah, Abu Dhabi canceled
× RELATED 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது..!!